Published : 21 May 2021 03:10 AM
Last Updated : 21 May 2021 03:10 AM
பெங்களூருவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து விற்பனை செய்வதாகக் கூறி நோயாளியின் குடும்பத்தாரிடம் ரூ.7.9 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு அருகேயுள்ள ஹொசக்கோட்டையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (61). இவர்பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸாரிடம் அளித்த புகாரில், “எனது 27 வயது மகனுக்குகடந்த 11-ம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரை கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்ட நிலையில், அதற்கு தேவையான 'ஆம்போட்ரெசின் பி' மருந்து தங்களிடம் இல்லை என மருத்துவமனையில் தெரிவித்தனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் அந்த மருந்தை வாங்க முயற்சித்தோம்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி அசோக் என்பவர் எங்களை தொடர்புகொண்டு, தன்னை மருந்து விற்பனையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். ரூ.7.9 லட்சம் கொடுத்தால், ‘ஆம்போட்ரெசின் பி’ மருந்துதருவதாக கூறினார். அவரை நம்பி ஆன்லைன் மூலம் அவரது வங்கிக் கணக்கில் ரூ.7.9 லட்சம் செலுத்தினோம். ஆனால் அதன்பிறகு மருந்தை தராத அவர், தனது செல்போனையும் அணைத்து வைத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸார், அசோக் மீது மோசடி வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். பெங்களூருவில் கடந்த இரு மாதங்களில் ஆக்சிஜன் சிலிண்டர், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதாக கூறி நோயாளிகளிடம் பணத்தை ஏமாற்றியது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT