Last Updated : 20 May, 2021 04:27 PM

 

Published : 20 May 2021 04:27 PM
Last Updated : 20 May 2021 04:27 PM

கருப்புப் பூஞ்சை பாதிப்பை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிடவும்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை பாதிப்பை இந்திய தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிடுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இதுதொடர்பான சுற்றறிக்கையை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதில், கருப்புப் பூஞ்சை பாதிப்பை தொற்றுநோய்ச் சட்டம் 1987ன் கீழ் நோயாக அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த வகை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு கண் நோய் நிபுணர்கள், காது,மூக்கு,தொண்டை நிபுணர்கள், பொது மருத்துவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டென்ட்டல் மேக்ஸிலோஃபேசியல் நிபுணர் என பல்துறை நிபுணர்களின் ஈடுபாடு தேவைப்படுகிறது. அத்துடன் ஆம்ஃபோடெரிசின் பி என்ற பூஞ்சை எதிர்ப்பு மருந்தையும் கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே, மியூகோர்மைகோசிஸ் பாதிப்பை நோயாக அறிவிக்க வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மியூகோர்மைகோசிஸ் பாதிப்பைக் கண்டறிவதில், சிகிச்சையளிப்பதில் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் அனுப்பியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மருத்துவமனைகளும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு என அஞ்சப்படும் உறுதி செய்யப்படும் நோயாளிகள் பற்றி சுகாதாரத் துறைக்கு, மாவட்ட மருத்துவ அதிகாரி (டிஎம்ஓ) மூலம் தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தாமாகவே முன்வந்து கருப்புப் பூஞ்சை பாதிப்பை நோயாக அறிவித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் 9 பேர் மட்டுமே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகும் பீதியூட்டும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் சுகாதாராத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குணப்படுத்தப்படக்கூடிய நோய். சைனஸ் போன்ற அறிகுறிகள் வந்தவுடனேயே உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றால் இதனை குணப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ம்யூகோர்மைகோசிஸ் (பிளாக் ஃபங்கஸ்) என்றால் என்ன?

ம்யூகோர்மைகோசிஸ் என்பது பூஞ்சைத் தொற்று. இது பெரும்பாலும் சுற்றுப்புறச்சூழலில் காணப்படும் நோய் பரப்பும் கிருமிகளை எதிர்கொள்ள இயலாத வகையில் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்களையே தாக்குகிறது.இது மிகவும் அரிதான அதேவேளையில் ஆபத்தான தொற்று. மியூகோர்மைசெட்ஸ் எனும் நோய்க்கிருமிகள் சுற்றுப்புறச் சூழலில் எப்போதுமே இருப்பவை தான். மண், தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. "இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. மண்ணிலும் காற்றிலும் மற்றும் ஆரோக்கியமான மக்களின் மூக்கு மற்றும் சளியிலும் கூட காணப்படுகிறது. ஆனால், உடல்நலக் கோளாறுகளுக்காக மருந்துகளை உட்கொண்டு அதனால் சுற்றுச்சூழல் கிருமிகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தவர்களையே எப்போதும் குறிவைக்கிறது.

யாருக்கு இந்தத் தொற்று ஏற்படும்?

இணை நோய்கள் கொண்டவர்கள், கட்டுக்குள் வராத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர், நீண்ட காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டெராய்டு மருந்துகள் கொண்டு சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு இந்தத் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ம்யூகோர்மைகோசிஸ் அறிகுறிகள் என்னென்ன?

கண்களைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தடிப்புகள், அல்லது கண்களைச் சுற்றி வலி, காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், ரத்தக்கசிவுடன் வாந்தி, மனப்பதற்றம் அல்லது குழப்பம் ஆகியன இந்நோயின் அறிகுறிகளில் சில. இருப்பினும் எல்லா மூக்கடைப்பும் ம்யூகோர்மைகோசிஸ் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
ம்யூகோர்மைகோசிஸ் எனப்படும் இந்த பிளாக் ஃபங்கஸ் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்திருக்கிறார்.

சிகிச்சை என்ன?

பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சை தான் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 4 முதல் 6 வாரங்களுக்கு மாத்திரை, மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை தொற்றின் வீரியம் அதிகமாக இருப்பின் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க மக்கள் தங்களின் ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ளுமாறும், ஸ்டீராய்டு மருந்து பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி தற்காத்துக் கொள்ளலாம்?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். அதுவும் கரோனா தொற்றிலிருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் கவனமுடன் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். ஸ்டீராய்டு மருந்துகளை அவசியமறிந்து அவசரமறிந்து மட்டுமே பயன்படுத்துக. ஆக்சிஜன் தெரபியின் போது நோயாளிகளுக்கு சுத்தமான நீரைக் கொண்டு ஈரப்பதமூட்டிகளை தயார் செய்ய வேண்டும். ஆண்டிபயாடிக், ஆண்டி ஃபங்கல் மருந்துகளையும் அவசியமின்றி உட்கொள்ள வேண்டாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x