Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் உயிரிழந்த கேரள பெண்- சவும்யா குடும்பத்தாருக்கு இஸ்ரேல் அதிபர் ஆறுதல்

சவும்யா

புதுடெல்லி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேலுக்கும், காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 10-ம் தேதி முதல் மோதல் வெடித்தது. இதில் கடந்த 11-ம் தேதி இஸ்ரேலின் அஷ்கிலான் நகரத்தை குறிவைத்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் சரமாரியாக ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அஷ்கிலான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ‘கேர்டேக்கராக’ பணியாற்றி வந்த கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த சவும்யா (30) என்ற பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் தலையீட்டால், சவும்யாவின் உடல் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தது. இதையடுத்து, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு சவும்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. சவும்யாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் இஸ்ரேலுக்கான தென்இந்திய தூதர் ஜானத்தீன் சட்ஹா நேரில் பங்கேற்றார்.

இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த சவும்யாவின் குடும்பத்தினரை இஸ்ரேல் அதிபர் ரேவென் ரிவ்லின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சவும்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இஸ்ரேலிய அதிபர் ஆறுதல் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x