Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

கரோனாவிலிருந்து மீண்டவர்கள் 3 மாதத்துக்குப் பின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: மத்திய அரசு பரிந்துரை

கரோனாவிலிருந்து மீண்டவர்கள் 3 மாதத்துக்குப் பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றுமத்திய சுகாதாரத்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் நாட்டின்பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், இரண்டாம்டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, ஏற்கெனவே மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் 70 சதவீதத்தை இரண்டாம் டோஸ் செலுத்தவே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நோய்த் தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க அண்மையில் பரிந்துரை செய்தது. இதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், பாலூட்டும் தாய்மார்கள் பிரசவத்துக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசிடம் நோய்த் தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 2 மாதங்களுக்குப் பின்னர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது 3 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x