Last Updated : 20 May, 2021 03:11 AM

 

Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

உ.பி.யில் ஆக்கிரமிக்கப்பட்டதாக பழமையான மசூதி இடிப்பு: மீண்டும் கட்டித்தரக் கோரி உயர் நீதிமன்றம் செல்கிறது முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்

புதுடெல்லி

உத்தரபிரதேச மாநிலம் பாராபங் கியின் ராம் ஸனேஹி காட் தாலுக்காவின் அரசு அலுவலகம் அருகில் முஸ்லிம்களின் ‘கரீப் நவாஸ் மசூதி’ இருந்தது. இது, நூறு வருடங்கள் பழமையானதாக கருதப்படுகிறது. உ.பி. சன்னி மத்திய வஃக்பு வாரியத்தின் சொத்துக்கள் பட்டியல் எண் 198-ல்இந்த மசூதி 1968- மே 17-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 15-ல் அந்த மசூதி ஆக்கிரமிக்கப்பட்டது எனவும், இதை ஏன் இடிக்கக் கூடாது எனக் கேட்டு அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளிக்காமல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதற்குள், மாவட்ட நீதிமன்றத்திடம் உத்தரவு பெற்று நேற்று முன்தினம் ராம் ஸனேஹி காட் தாலுகாவின் அரசு நிர்வாகத்தினரால் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இது குறித்து பாரபங்கி மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ்சிங் கூறும்போது, ‘ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான கட்டிடம் என அலகாபாத் உயர் நீதிமன் றம் கூறிய பின் அதை இடிக்க செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி யுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்றார்.

மசூதியின் நிர்வாக உறுப்பினர்மவுலானா அப்துல் முஸ்தபா கூறுகையில், ‘‘அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழுகை நடத்த மசூதிக்கு வந்தனர். இதற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டவுடன் அதை எதிர்த்து போராட அச்சத்தின் காரணமாக முஸ்லிம்கள் மசூதிக்கும் வரவில்லை. மசூதிஇடிப்பிற்கு பின் காவல் துறையினரின் சித்ரவதைக்கு அஞ்சிமுஸ்லிம்கள் பலரும் வெளியூர்களுக்கு சென்று விட்டனர்’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, உபி சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தலைவர் ஜபூர் அகமது ஃபரூக்கி, மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்துள்ளார். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 100 ஆண்டுகால மசூதிஇடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக ஃபரூக்கி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்திய முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் பொதுச்செயலாளர் மவுலானா காலீத் சைபுல்லா ரஹமான் வெளியிட்ட அறிக்கையில், ‘மசூதியின் மீது எந்த சட்டப்பிரச்சினையும் கிடையாது. ராம் ஸனேஹி காட் தாலூகாவினர் கேட்ட தஸ்தாவேஜ்கள் மீது மசூதியின் நிர்வாகம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அதில் மே 31 வரை மசூதியை இடிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்குள் மசூதி இடிக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். அதில் மசூதியின் இடிபாடுகளை அகற்றாமல் அந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மசூதி இடிப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோருவோம். அங்கு மீண்டும் மசூதியை கட்டித்தரவும் வலியுறுத்துவோம்’ எனத் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x