Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

தொழிற்சாலையில் தடுப்பூசி தயாராவது எப்படி?

உறை குத்தும் தயிரில் உள்ள‘லாக்டோபேசில்லஸ் அசிடோபில்ஸ்' (Lactobacillus acidophilus) எனும் பாக்டீரியா, பாலில் உள்ள லாக்டோஸ் (lactose) எனும் சர்க்கரை பொருளை செரிமானம் செய்து பல்கிப் பெருகுகிறது. இந்த நிகழ்வின் இறுதியில் பால் தயிராகிறது. அதுபோல பயோரியாக்டர் எனும் உயிரி வினைகலத்தில் கரோனா வைரஸ் வளர்க்கப்படும். தயிருக்கு உறை குத்துவது போல தேசிய வைராலஜி நிறுவனம் NIV-2020-770 கரோனா வைரஸ் விதையைப் பயன்படுத்தி கோவாக்சின் தயார் செய்யப்படுகிறது.

உயிரி வினைகலத்தில் வளரும் கரோனா வைரசை மட்டும் வடிகட்டி பிரித்து எடுத்து சுத்தம் செய்யப்படும். பின்னர் அதனை செயலிழக்க செய்து அட்ஜுவன்ட் சேர்த்து கிருமிகளில்லாமல் சுத்தம் செய்யப்பட்ட மருந்து குப்பிகளில் அடைக்கப்படும். இடையிடையே தடுப்பூசியின் தரத்தை சோதித்து தரக்கட்டுபாடு செய்யப்படும்.

உயிரி காப்பு நிலை 3 உற்பத்திக் கூடம்

மனிதர்கள் மீது கடும் நோயை ஏற்படுத்தவல்ல கரோனா வைரசை வளர்ப்பதுதான் தடுப்பூசி உற்பத்தியின் முதல் கட்டம். இப்படி வளர்க்கப்படும் வைரஸ் அங்கே பணிபுரிபவர்கள் மீது தொற்றக் கூடாது, மேலும் வெளியே பரவிவிடக் கூடாது. அதற்கான பாதுகாப்பு நெறிமுறைதான் உயிரி காப்பு நிலை 3.

தொழிற்சாலையின் உயிரி காப்பு நிலை 3 பகுதிக்குள் முன்அனுமதி பெற்றவர்களைத் தவிர யாரும் நுழைய முடியாதபடி பாதுகாப்புடன் இருக்கும். நுழைவாயிலில் அடுத்தடுத்து இரண்டு கதவுகள் இருக்கும். முதல் கதவு வழியே உள்ளே சென்று அதனை மூடிய பிறகு தான் இரண்டாம் கதவு திறக்கும்படி அமைந்திருக்கும். மேலும்உயிரி காப்பு நிலை 3 அறை முழுவதும் எப்போதும் குறை காற்றழுத்த நிலையில்தான் இருக்கும். எனவே கதவு திறக்கும்போதுகூட அந்த அறையிலிருந்து காற்று வெளியே செல்லாது. அந்த அறைக்குள் குறை காற்றழுத்த நிலை உள்ளதால், உள் நோக்கிதான் காற்று புகும். அந்த அறைக்கு உள்ளே உள்ள காற்றை அடிக்கடி சுத்தம் செய்ய உயர் திறன் காற்றுத் துகள் வடிகட்டி அமைப்பு (hepa) இருக்கும். பாக்டீரியா வைரஸ் போன்றவற்றை வடிகட்டி அழிக்கும் தன்மை கொண்டதாக இந்தக் காற்று சுத்திகரிப்பான் இருக்கும். மேலும் அந்த அறையில் உருவாகும் கழிவுகள் வெளியே வராது. உள்ளேயே சுத்திகரிப்பு செய்ய அமைப்புகள் இருக்கும். மேலும் உள்ளே தயார் ஆகும் செயலிழந்த வைரஸ்களின் தரத்தைப் பரிசோதனை செய்ய தரக்கட்டுப்பாடு அமைப்புகளும் உள்ளேதான் இருக்கும். செயலிழந்த வைரஸ் மட்டுமே உள்ளிருந்து வெளியே வரும் படியாக அந்த அமைப்பு இருக்கும்.

உற்பத்தியைப் பெருக்க திட்டம்

அடிப்படையில் செயலிழந்த வைரசை உற்பத்தி செய்தால்தான் கோவாக்சின் தயார் முடியும். எனவே வேறு நிறுவனங்களில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய அங்கே உயிரி காப்பு நிலை 3 உற்பத்தி வசதி இருக்க வேண்டும். முழுமூச்சுடன் முனைந்தால் நான்கு மாதத்தில் இந்த வசதிகளைப் பொதுத்துறை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஏற்படுத்திவிட முடியும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

புனேவின் மஞ்சரியில் உள்ள இன்டர்வெட் இந்தியா பிரைவேட் லிமிடெட்க்கு சொந்தமான தடுப்பூசி தொழிற்சாலையிலும் கோவாக்சின் தயாரிக்க முடியும். மூடிக்கிடக்கும் இந்த தொழிற்சாலையை பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனம் பயோவெட் எடுத்துக்கொண்டு, அதனைப் பயன்படுத்தி கோவாக்சின் தயாரிக்க மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஆணை பிறப்பித்துள்ளது.

கூடுதல் உற்பத்தி வசதிகளை உருவாக்கி, வரும் செப்டம்பருக்குள் மாதம் பத்து கோடி டோஸ் கோவாக்சின் தயாரிப்பை உறுதிசெய்ய மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் ஏற்கெனவே உயிரி காப்பு நிலை 3 உற்பத்தி வசதி வைத்துள்ள, பனேசியா பயோடெக் என்ற நிறுவனத்துடன் தடுப்பூசி உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஹாஃப்கின் பயோ பார்மாசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் இம்யூனோலாஜிகல்ஸ் லிமிடெட், பாரத் இம்யூனோலாஜிகல்ஸ் அண்ட் பயோலாஜிகல்ஸ் லிமிடெட் ஆகியஅரசுசார் பொதுத்துறை நிறுவனங்களிலும் உயிரி காப்பு நிலை 3 உற்பத்தி வசதி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்திமேற்கொள்ள மத்திய அரசு ரூ.65 கோடிநிதியுதவி அளித்துள்ளது. இதேபோல கோவிஷீல்டு தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கும் இந்திய அரசு நிதி அளித்துள்ளது.

தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவது எப்படி?

கரோனா 2-ம் அலையில் கொத்து கொத்தாக மரணம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாளொன்றுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி டோஸ் அளவு சரிந்து வருகிறது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல ஏப்ரல் 1-10 வரையில் தினமும் சராசரியாக 36 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையிலிருந்து, ஏப்ரல் 11-20 வரையிலான நாட்களில் 28 லட்சமாகவும், ஏப்ரல் 21-30 வரையிலான நாட்களில் 24 லட்சமாகவும் மே 1-10 வரையில் வெறும் 17 லட்சமாகவும் சடசடவென சரிந்துள்ளது. போலி செய்திகளால் ஏற்படும் தடுப்பூசி தயக்கம் இதற்கு ஒரு காரணம் என்றாலும், அதைவிட முக்கியக் காரணம் தடுப்பூசி கையிருப்பில் இல்லாமல் இருப்பதுதான். பல தடுப்பூசி மையங்கள் கையிருப்பு இல்லை என்ற அறிவிப்புடன் மூடப்பட்டுள்ளன.

இந்த வேகத்தில் சென்றால் 18 வயதுக்கும் மேற்பட்ட94 கோடி இந்தியர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியை 2021 டிசம்பருக்குள் அளிக்க முடியாது. இன்று உள்ள வேகத்தைப் போல நான்கு மடங்கு அதிக அளவில், அதாவது சராசரியாக தினமும் 73 லட்சம் டோஸ் என்ற விகிதத்தில் தடுப்பூசி அளித்தால்தான் இது சாத்தியம். இந்த இலக்கை அடைய பல தடைக்கற்கள் இருந்தாலும், மிக முக்கிய சவால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது.

அடுத்த 12 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி தரவேண்டும் எனில் ஒவ்வொரு மாதமும் 16 கோடி டோஸ் தேவை. அதாவது நாளொன்றுக்கு 54 லட்சம் டோஸ் தேவை. ஆனால், உற்பத்தியோ நாளொன்றுக்கு 25 லட்சம் டோஸ்தான். அடுத்த சில மாதங்களில் உற்பத்தி ஒரு நாளைக்கு 30 லட்சம் டோஸ் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதுவும் போதாது. விரைவாக அனைத்து ஆற்றலையும் ஒருங்கிணைத்து தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்குவது நம் முன் உள்ள முக்கிய சவால் ஆகும். ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 25 கோடி டோஸ் ஒப்பந்த அடிப்படையில் அதன் கூட்டு நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்பட உள்ளது. என்றாலும் மைனஸ் பதினெட்டு டிகிரி வெப்பநிலையில் இந்தத் தடுப்பூசியை வைத்திருக்க வேண்டும் என்பதால், பட்டிதொட்டி எல்லாம் இதை எடுத்துச் செல்வது கடினம். அத்துடன் உற்பத்தியில் பெரும்பகுதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய வேண்டியும் வரும்

கட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், அறிவியல் தொழில்நுட்பத் துறை, புதுடெல்லி

தொடர்புக்கு tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x