Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

திருமலையில் சாமியாரின் பேச்சை கேட்டு புதையலுக்காக 80 அடி வரை சுரங்கம் தோண்டிய 6 பேர் கைது

திருப்பதி எம்.ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்த நாயுடு என்ற கட்டிட மேஸ்திரி. கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கட்டிடங்கள் கட்டி வந்தார்.

இவருக்கும் நெல்லூரைச் சேர்ந்த ராமய்யா என்ற சாமியாருக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. ஒரு முறை ராமய்யா தன்னை சந்திக்க வந்த நாயுடுவிடம், திருமலையில் தான் கூறும் ஒரு இடத்தில் சுமார் 120 அடி வரை சுரங்கம் தோண்டினால் தங்கமும் வைரமும் கொண்ட புதையல் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதை நம்பிய நாயுடு, வெளியூர் ஆட்கள் மூலம் திருமலையில் சாமியார் குறிப்பிட்ட இடத்தில் ரகசியமாக இரவில் மட்டும் குழி தோண்டத் தொடங்கினார். சுமார் ஓராண்டு வரை 80 அடிக்கு அவர்கள் சுரங்கம் தோண்டி விட்டனர். அப்போது பாறை குறுக்கே வந்ததால் பணி பாதிக்கப்பட்டது. தொழிலாளர்களும் பாறையை இரவு நேரத்தில் உடைத்தனர். இதனால் அங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு சந்தேகம் வந்து, திருமலை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு பாறைகளை உடைத்துக்கொண்டிருந்த 5 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாகப் பேசியதால், ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் சாமியார் கூறியதன் பேரில் சுரங்கம் தோண்டி வருவதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கர்நாடகாவை சேர்ந்த அந்த 5 தொழிலாளர்கள் மற்றும் அவர்களை பணியில் ஈடுபடுத்திய நாயுடுவை திருமலை போலீஸார் கைது செய்து திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது 6 பேரும் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x