

கரோனா வைரஸால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவி்த்துள்ளார்.
பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் செலுத்தப்படும் இந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் மாதாந்திர வட்டி மூலம் குழந்தையின் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு குழந்தையை பராமரிக்க வேண்டும்.
இது குறித்து ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜென்மோகன் ரெட்டி நேற்று வெளியி்ட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா 2-வது அலையால் குழந்தைகளின் நிலை பாதுகாப்பற்ற சூழலுக்குச் சென்றுள்ளது, அதிகமான பாதிப்பை குழந்தைகள்தான் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் தாய், தந்தையை இழந்து குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆந்திர மாநில அரசு குழந்தைகளின் நலனுக்காக புதிய திட்டத்தை அறிவிக்கிறது. இதன்படி, கரோனாவில் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும். இந்த தொகையின் மூலம்கிடைக்கும் வட்டியை குழந்தையை பராமரிக்கும், வளர்க்கும் பாதுகாவலர் எடுத்துக்கொண்டு, அந்த குழந்தையை கவனிக்க வேண்டும்.
கரோனாவால் ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தையை அடையாளம் கண்டு அவர்களின் பெயரில் இந்த வைப்புத் தொகையை செலுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு இம்மாதம் இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது.
கிராமங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்.
கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பிளாக் ஃபங்கஸ் தொற்றால் ஆந்திராவில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்.
ஆந்திர அரசின் ஆரோக்கிய ஸ்ரீ சுகாதாரக் காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சையை மருத்துவமனைகள் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.