Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

போராட்டம் தொடங்கி 6 மாதம் நிறைவு: விவசாயிகள் கருப்பு தினம் அறிவிப்பு

புதுடெல்லி

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6 மாதத்தை நிறைவு செய்ய உள்ளதால், வரும் 26-ம் தேதியை, கருப்பு தினமாக அனுசரிக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கடந்த நவம்பர் 26-ம் தேதி டெல்லி எல்லையில் விவசாயிகள் அமைப்பினர் போராட்டத்தைத் தொடங்கினர். வரும் 26-ம் தேதியுடன் இந்த தொடர் போராட்டம் 6 மாதத்தை நிறைவு செய்யவுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மே 26-ம் தேதி தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். அனைத்து வீடுகளிலும், வாகனங்களிலும் கருப்புக் கொடியை அன்றைய தினம் விவசாயிகள் ஏற்றி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வர். மேலும் மே 26-ம் தேதி தினமானது, பிரதமராக மோடி பதவியேற்று 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் தேதியாக அமையவுள்ளது. எனவே அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்தோம். இந்தப் போராட்டத்துக்கு அனைத்து மாநில விவசாயிகளும் ஆதரவு தரவேண்டும்.

பஞ்சாப், ஹரியாணாவிலுள்ள அனைத்து வீடுகள், கடைகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் கருப்புக் கொடியை ஏற்ற நான் கோரிக்கை விடுக்கிறேன். கடந்த 6 மாதமாக எங்களது கோரிக்கை எதையும் அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து உரம், டீசல், பெட்ரோல் விலையை ஏற்றி விவசாய தொழிலை நடத்த விடாமல் செய்து வருகிறது. இவ்வாறு விவசாயிகள் சங்கத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x