பஞ்சாப் பொற்கோவிலில் இரு பிரிவினரிடையே மோதல்: பலர் காயம்

பஞ்சாப் பொற்கோவிலில் இரு பிரிவினரிடையே மோதல்: பலர் காயம்
Updated on
1 min read

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், 12 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. பொற்கோவிலில் வெளிப்படையாக இரு பிரிவினர் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 12 பேர் காயமடைந்ததாக தெரிகிறது.

அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலில் ஆபரேஷன் புளூஸ்டார் நடத்தப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, பொற்கோவிலில் இன்று காலை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று காலை, பொற்கோவிலை நிர்வகித்துவரும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றொரு முற்போக்கு சீக்கிய அமைப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், இரு பிரிவினரும் தங்களிடம் இருந்த வாள், கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் பொற்கோவிலில் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில், இரு பிரிவினரிலும் 12 பேர் காயமடைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் தடுத்து நிறுத்தியதாகவும் அதனை தொடர்ந்து மோதல் வெடித்ததாக தெரிகிறது. எனுனும் மோதலுக்கான காரணம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in