Published : 15 May 2021 03:28 PM
Last Updated : 15 May 2021 03:28 PM

பிளாக் ஃபங்கஸ் தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டது ஹரியாணா அரசு

பிளாக் ஃபங்கஸ் தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டது ஹரியாணா அரசு. இதன்மூலம் நோய்த் தொற்று குறித்து கண்டறியலாம் எனவும் பரவல் ஏற்பட்டால் அதை சமாளிக்கலாம் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டுமே மாநிலத்தில் 40 பேருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மாநில அரசு இவ்வாறாக அறிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறும்போது, "பிளாக் ஃபங்கஸ் அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிடப்படுகிறது. இனி மருத்துவர்கள் பொதுமக்கள் யாரேனும் இத்தொற்றுடன் வருவார்களேயானால் சிஎம்ஓக்களிடம் தெரிவிப்பார்கள். மாநிலத்தில் உள்ள மருத்துவர்களுடன் ரோத்தக் சீனியர் மருத்துவர்கள் சங்கம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவிருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது" என்றார்.

எந்த ஒரு நோயையாவது ஓர் அரசு அறிவிக்கப்பட்ட நோய் என பட்டியலிடுகிறது என்றால் அந்த நோய் குறித்தத் தகவல்களை அனைத்து அரசு, தனியார் மருத்துவர்களும் மருத்துவத் துறையின் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என அர்த்தம்.

ம்யூகோர்மைகோசிஸ் (பிளாக் ஃபங்கஸ்) என்றால் என்ன?

ம்யூகோர்மைகோசிஸ் என்பது பூஞ்சைத் தொற்று. இது பெரும்பாலும் சுற்றுப்புறச்சூழலில் காணப்படும் நோய் பரப்பும் கிருமிகளை எதிர்கொள்ள இயலாத வகையில் உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்களையே தாக்குகிறது.இது மிகவும் அரிதான அதேவேளையில் ஆபத்தான தொற்று. மியூகோர்மைசெட்ஸ் எனும் நோய்க்கிருமிகள் சுற்றுப்புறச் சூழலில் எப்போதுமே இருப்பவை தான். மண், தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. "இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. மண்ணிலும் காற்றிலும் மற்றும் ஆரோக்கியமான மக்களின் மூக்கு மற்றும் சளியிலும் கூட காணப்படுகிறது. ஆனால், உடல்நலக் கோளாறுகளுக்காக மருந்துகளை உட்கொண்டு அதனால் சுற்றுச்சூழல் கிருமிகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தவர்களையே எப்போதும் குறிவைக்கிறது.

யாருக்கு இந்தத் தொற்று ஏற்படும்?

இணை நோய்கள் கொண்டவர்கள், கட்டுக்குள் வராத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர், நீண்ட காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டெராய்டு மருந்துகள் கொண்டு சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு இந்தத் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ம்யூகோர்மைகோசிஸ் அறிகுறிகள் என்னென்ன?

கண்களைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தடிப்புகள், அல்லது கண்களைச் சுற்றி வலி, காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், ரத்தக்கசிவுடன் வாந்தி, மனப்பதற்றம் அல்லது குழப்பம் ஆகியன இந்நோயின் அறிகுறிகளில் சில. இருப்பினும் எல்லா மூக்கடைப்பும் ம்யூகோர்மைகோசிஸ் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.

ம்யூகோர்மைகோசிஸ் எனப்படும் இந்த பிளாக் ஃபங்கஸ் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்திருக்கிறார்.

சிகிச்சை என்ன?

பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சை தான் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 4 முதல் 6 வாரங்களுக்கு மாத்திரை, மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை தொற்றின் வீரியம் அதிகமாக இருப்பின் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க மக்கள் தங்களின் ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொள்ளுமாறும், ஸ்டீராய்டு மருந்து பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி தற்காத்துக் கொள்ளலாம்?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். அதுவும் கரோனா தொற்றிலிருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் கவனமுடன் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். ஸ்டீராய்டு மருந்துகளை அவசியமறிந்து அவசரமறிந்து மட்டுமே பயன்படுத்துக. ஆக்சிஜன் தெரபியின் போது நோயாளிகளுக்கு சுத்தமான நீரைக் கொண்டு ஈரப்பதமூட்டிகளை தயார் செய்ய வேண்டும். ஆண்டிபயாடிக், ஆண்டி ஃபங்கல் மருந்துகளையும் அவசியமின்றி உட்கொள்ள வேண்டாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x