Published : 15 May 2021 02:46 PM
Last Updated : 15 May 2021 02:46 PM

கோவிட்-19 தடுப்பூசி:  மொத்த எண்ணிக்கை 18 கோடியைக் கடந்தது

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவது கட்டம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 26,02,435 முகாம்களில் 18,04,57,579 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில், 96,27,650 சுகாதாரப் பணியாளர்கள் (முதல் முறை), 66,22,040 சுகாதாரப் பணியாளர்கள் (இரண்டாம் முறை), 1,43,65,871 முன்கள பணியாளர்கள் (முதல் முறை), 81,49,613 முன்கள பணியாளர்கள் (இரண்டாம் முறை), 18-45 வயது வரையில் 42,58,756 பேர் (முதல் முறை), 45-60 வயதில் 5,68,05,772 நபர்கள் (முதல் முறை) மற்றும் 87,56,313 நபர்கள் (இரண்டாவது முறை), 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 5,43,17,646 பேர் (முதல் முறை) மற்றும் 1,75,53,918 பயனாளிகள் (இரண்டாவது முறை) ஆகியோர் அடங்குவர்.

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த தடுப்பூசிகளில் 66.73%, 10 மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது.

18-44 வயதிற்குட்பட்ட பிரிவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,28,216 பயனாளிகளும், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 42,58,756 பயனாளிகளும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் 28,241 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 11 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவிட் தொற்றிலிருந்து நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,04,32,898 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 83.83 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,53,299 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களில் நான்காவது முறையாக அன்றாட புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதிதாக குணமடைந்தவர்களில் 70.49 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 36,73,802 ஆக இன்று சரிந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 15.07% ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 31,091 குறைந்துள்ளது. தற்போதைய பாதிப்புகளில் 77.26%, 11 மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச சமூகம் அளித்துவரும் உதவிகளில், தங்களது உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இதுவரை 10,796 பிராணவாயு செறிவூட்டிகள், 12,269 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 6,497 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 4.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை மத்திய அரசு விநியோகித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 புதிய பாதிப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது. இதில் 74.85%, 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கர்நாடகாவில் 41,779 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 39,923 பேரும், கேரளாவில் 34,694 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தேசிய உயிரிழப்பு வீதம், இந்தியாவில் தற்போது 1.09 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,890 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 72.19 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 695 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 373 பேரும் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x