

கரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் முறைப்படி இந்தியாவில் இன்று அறிகமுகம் செய்தது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசி என்பதால், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ஒரு டோஸ் ரூ.995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்ஆர்பி விலை ரூ.948 ஆகவும், 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.995 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதன்படி, கடந்த 1-ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முறையான அனுமதி நேற்று கிடைத்ததையடுத்து, இன்று ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.948 ஆகவும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் ஒரு டோஸ் ரூ.995 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வரும் மாதங்களில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும், இந்தியாவிலும் விரைவில் தயாரிக்கப்படும். அதற்காக 6 நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். மக்களின் தேவைகளை உரிய காலத்தில், எளிமையாக நிறைவேற்றுவோம். மக்களிடம் பரவலாகச் சென்றடையும் நோக்கில் மத்திய அரசு மற்றும் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் இணைத் தலைவர் ஜி.பி.பிரசாத் கூறுகையில் “ இந்தியாவி்ல் கரோனா வைரஸ் பரவல்அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிதான் அதைத் தடுக்கவும், எதிர்க்கவும் சரியான ஆயுதம். இந்தியர்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ இந்த நேரத்தில், நம்முடைய முக்கியமான முன்னுரிமை என்பது தடுப்பூசி தான்” எனத் தெரிவித்தார்.