Last Updated : 14 May, 2021 12:58 PM

 

Published : 14 May 2021 12:58 PM
Last Updated : 14 May 2021 12:58 PM

9.5 கோடி விவசாயிகளுக்கு 8-வது தவணை நிதியுதவி; ரூ.19 ஆயிரம் கோடி வழங்கினார் பிரதமர் மோடி: முதல் முறையாக மே.வங்கம் இணைந்தது

விவசாயிகளுக்கான 8-வது தவணை நிதியுதவித் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த காட்சி | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

நாடு முழுவதும் உள்ள 9.5 கோடி விவசாயிகளுக்கு பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த 8-வது தவணையில் 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டிலிருந்து இந்த திட்டத்தில் சேராமல் ஒதுங்கி இருந்த மே.வங்கம் முதல் முறையாகச் சேர்ந்துள்ளது. இதில் 7 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.

2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி பிஎம்-கிசான் திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு கொண்டுவந்தது. இதன்படி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.15 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிஎம்-கிசான் திட்டத்தில் 8-வது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரும் பங்கேற்றார். 8-வது தவணை திட்டத்தில் 9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் வழங்கினார்.

2019ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகள் இதில் சேராமல் இருந்தனர். இந்த முறை அவர்களும் சேர்ந்ததையடுத்து, 7 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தைத் தொடங்கிவைத்து உ.பி., மகாரஷ்டிரா, ஆந்திரா, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 விவசாயிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

பிரதமர் மோடி பேசுகையில், “விவசாயிகளின் நலனுக்காகவும், ஊக்கப்படுத்தவும் தொடர்ந்து மத்திய அரசு இயங்குகிறது. விவசாயிகள் பாரம்பரிய வேளாண்மையைத் தவிர்த்து இயற்கை வேளாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். இதற்குக் குறைந்த அளவே முதலீடு தேவை. மனிதர்களுக்கும் நல்லது, மண்ணுக்கும் நல்லது, நல்ல லாபமும் கிடைக்கும்.

அனைத்து விவசாயிகளும், குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் இந்த நிதியுதவி திட்டத்தால் திருப்தி அடைந்துள்ளனர். பல விவசாயிகள் இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்ததை சமூக ஊடகங்கள் வாயிலாகப் பார்த்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x