Last Updated : 14 May, 2021 08:43 AM

 

Published : 14 May 2021 08:43 AM
Last Updated : 14 May 2021 08:43 AM

சத்தீஸ்கரில் புதிய சட்டப்பேரவைக் கட்டுமான பணிகள் நிறுத்தம்: கரோனா அதிகாரிப்பால் முதல்வர் உத்தரவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டப்பேரவைக் கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளிகள் ரத்து செய்யப்படுவதாகவும், மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களின் பணிகள் ஆகியவை கரோனா வைரஸ் பரவலால் நிறுத்தப்படுவதாகவும முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்

மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவி்த்துள்ளார்.

ஆளுநருக்கு புதிய மாளிகை, சட்டப்பேரவைக் கட்டிடம், முதல்வருக்கு இல்லம், அமைச்சர்கள், மூத்த உயர் அதிகாரிகளுக்கு இல்லங்கள் , நவா ராய்ப்பூர் பகுதியில் விருந்தினர் இல்லம் ஆகியவை கட்டப்பட்டு வந்தன. இவை அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படுவதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.

இ்ந்தத் திட்டங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி பூமிபூஜை போடப்பட்டு பணிகள் நடந்து வந்தநிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து முதல்வர் பூபேஷ் பாகல் ட்வி்ட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நமது குடிமக்கள், நமது முன்னுரிமை. புதிய சட்டப்பேரவைக்கான அடிக்கல், ஆளுநர் மாளிகை, முதல்வர் இல்லம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு குடியிருப்புகள், விருந்தினர் மாளிகை கட்டுமானம் ஆகியவை கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே தொடங்கப்பட்டன.

ஆனால், தற்போதுள்ள அசாதாரண சூழல் கருதி, இந்தப்பணிகளை உடனடியாக நிறுத்துகிறோம். நவா ராய்ப்பூரில் கட்டப்பட்டுவரும் பெரும்பாலான மிகப்பெரிய கட்டிடப்பணிகளும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவையடுத்து, மாநிலத்தில் முக்கியக் கட்டுமானத் திட்டங்களின் பணிகளை நிறுத்த ஒப்பந்ததாரர்களுக்கு, பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய சட்டப்ேபரவைக் கட்டிடம் கட்டுவதற்காக ரூ.118 கோடி மதிப்பிலும், மிகப்பெரிய கட்டிடங்கள் கட்ட ரூ.245.16 கோடி மதிப்பிலும் விடுக்கப்பட்ட ஒப்பந்த புள்ளிகளும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றம் கட்டும் மத்திய விஸ்டா திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அதில் செலவு செய்யப்படும் பணத்தை மக்கள் சுகாதாரத்தில் செலவிட வலியுறுத்தியது. இதற்கு பதிலடியாக சத்தீஸ்கரில் கட்டப்பட்டுவரும் புதிய சட்டப்பேரவைக் கட்டிடம், முதல்வர், ஆளுநர் இல்லம் குறித்து பாஜக கேள்வி எழுப்பியது. இதையடுத்து, சத்தீஸ்கர் அரசு, புதிய கட்டுமானங்கள் அனைத்தையும் நிறுத்தி உத்தரவிட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது கரோனாவில் 1.22 லட்சம்பேர் சிகிச்சையில் உள்ளனர், 11ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x