Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM
கரோனா பாதிப்பால் மருத்துவ மனையில் மரணப் படுக்கையில் இருந்த தாய்க்காக அவரது மகன் செல்போனில் பாட்டு பாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டியான சங்கமித்ரா சாட்டர்ஜி, கரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும், அவரது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது. ஒருகட்டத்தில், அவர் இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்பதை அறிந்த மருத்துவர்கள், யாருடனாவது பேச விருப்பமா எனக் கேட்டுள்ளனர். அதற்கு, தனது மகன் சோஹம் சாட்டர்ஜியுடன் பேச விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, சோஹம் சாட்டர்ஜியை வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்ட மருத்துவர்கள், அவரது தாயாரின் நிலையை எடுத்துக்கூறி, அவருடன் மகிழ்ச்சியாக ஏதேனும் பேசுங்கள் எனக் கூறியுள்ளனர். பின்னர் தாயும், மகனும் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர். செல்போனில் மகனை பார்த்த மகிழ்ச்சியில் பேசிய சங்கமித்ரா, தனக்காக ஒரு பாடல் பாடுமாறு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது மகனும் பழைய இந்தி பாடல் ஒன்றை பாடினார். அதனை உணர்ச்சி ததும்ப கேட்டுக் கொண்டிருந்த சங்கமித்ரா, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இந்த வீடியோ காட்சியை அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு லட்சக்கணக்கானோர் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT