Last Updated : 13 May, 2021 05:17 PM

 

Published : 13 May 2021 05:17 PM
Last Updated : 13 May 2021 05:17 PM

பெங்களூருவில் இந்திரா உணவகங்களில் ஏழைகளுக்கு இலவச உணவு: கரோனா நெருக்கடியில் தவித்தோருக்கு ஆறுதல்

பெங்களூரு

பெங்களூருவில் கரோனா ஊரடங்கினால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான ஏழைகளுக்கு வரும் மே 24ம் தேதி வரை இந்திரா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது.

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதால் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமானோர் வேலை இழந்த நிலையில் கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் கர்நாடக அரசு ஏழைகளுக்கு அரசின் இந்திரா உணவகத்தில் இலவச உணவும் நியாய விலைக் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது.

இதையடுத்து பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட 174 இந்திரா உணவகங்களில் இன்று காலை முதல் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக‌ உணவு பொட்டலங்களை வழங்கப்பட்டன.

இதனைப் பயனாளர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று உணவு பொட்டலத்தை பெற்று சென்றனர்.

சாலையோரத்தில் வசிப்பவர்கள், வயதானவர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரும் பெண்களும் இலவச உணவை வாங்கியதை காண முடிந்தது.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருவருக்கு 3 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர மாநகராட்சி சார்பில் குடிசைப் பகுதிகளில் தற்காலிக உணவகம் திறக்கப்பட்டு ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

கரோனா நெருக்கடியில் பொருளாதார ரீதியாக தவித்த ஏழைக‌ளுக்கு இந்தத் திட்டம் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளதாக பயனாள‌ர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x