Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு

பனாஜி

கோவா மருத்துவக் கல்லூரி, மருத்துவ மனையில் 26 கரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

கோவாவின் பாம்போலிம் பகுதியில் கோவா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்படுகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் அந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை அடுத்தடுத்து 26 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே கூறும்போது, ‘‘26 நோயாளிகள் உயிரிழந்தது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அவர் கூறும்போது, ‘‘நோயாளிகள் உயிரிழப்பு குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய குழு நியமிக்கப்படுகிறது. மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. எனினும் சில மருத்துவமனைகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேருவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

சிறிய மாநிலமான கோவாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 30,598 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 561 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 9-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது. வரும் 23-ம்தேதி வரை ஊரடங்கு கண்டிப்புடன் அமல் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x