Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM
கர்நாடகாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆக்சிஜன் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தினார். பின்னர் எடியூரப்பா கூறும்போது, ‘‘கரோனாதொற்றின் பாதிப்பால் ஆக்சிஜன்தேவை அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டமரணங்கள் கர்நாடக மாநிலத்துக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. எனவே இனி அத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் பேருந்து சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது மருத்துவமனைக்கு வெளியே ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் கரோனா நோயாளிகளை காப்பாற்றும் வகையில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்சிஜன் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொருபேருந்திலும் 8 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் நோயாளிகளையும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிப்போரையும் இந்தபேருந்து விரைந்து சென்று காப்பாற்றும். முதல்கட்டமாக பெங்களூருவில் அரசு மருத்துவமனைகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT