Published : 11 May 2021 06:30 PM
Last Updated : 11 May 2021 06:30 PM

கரோனா குறைந்தது: பிரிட்டனில் தளர்வுகள் அறிவிப்பு

பிரிட்டனில் கரோனா பரவல் குறைந்ததன் காரணமாக அங்கு பல்வேறு தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “மதுபான விடுதிகள், உணவு விடுதிகளில் இனி வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம். உள் அரங்கில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மக்களை அனுமதிக்கலாம். இந்த அறிவிப்பு மே 17ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. கரோனா தளர்வுகள் படிப்படியாக வெளியிடப்பட உள்ளன. மேலும் சில தளர்வுகள் வரும் நாட்களில் வெளியாகும்" என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,357 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 4 பேர் பலியாகினர். ஸ்காட்லாந்து, ஐயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

பிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்தை வேகமாகச் செலுத்தியதன் காரணமாக அங்கு கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக 2,000க்கும் குறைவானவர்களே தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

உலக அளவில் கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்துவதில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை வகித்து வருகின்றன.

உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x