Published : 11 May 2021 03:21 PM
Last Updated : 11 May 2021 03:21 PM

மாநிலங்களுக்கு 3.4 லட்சம் ரெம்டசிவர் மருந்து: மத்திய அரசு விநியோகம்

புதுடெல்லி

மாநிலங்களுக்கு 3.4 லட்சம் ரெம்டசிவர் மருந்து குப்பிகளை மத்திய அரசு விநியோகம் செய்துள்ளது.

கோவிட் -19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச சமூகம் அளித்துவரும் உதவிகளில், தங்களது உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இதுவரை 8,900 பிராணவாயு செறிவூட்டிகள், 5,043 பிராணவாயு சிலிண்டர்கள், 18 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 5,698 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3.4 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை மத்திய அரசு விநியோகித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு (61 நாட்கள்) கோவிட் தொற்றுக்கு நாட்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை முதன்முறையாகக் கணிசமாகக் (30,016) குறைந்துள்ளது.

அதேபோல 61 நாட்களுக்குப் பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளை விட புதிதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நம் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட் -19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 17.27 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 25,15,519 முகாம்களில் 17,27,10,066 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் (16,735) உள்ளிட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18-44 வயதில் மொத்தம் 25,59,339 பயனாளிகளுக்குக் கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 25 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசித் திட்டத்தின் 115-வது நாளன்று (மே 10, 2021) 25,03,756 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கோவிட் தொற்றிலிருந்து இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,90,27,304 ஆக (82.75%) பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,56,082 பேர் குணமடைந்தனர். இவர்களில் 72.28 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 புதிய பாதிப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது. இதில் 69.88 சதவீதம், 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கர்நாடகாவில் 39,305 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 37,236 பேரும், தமிழகத்தில் 28,978 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,15,221 ஆக சரிந்துள்ளது. இதில் 82.68 சதவீதம், 13 மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

தேசிய உயிரிழப்பு வீதம், தற்போது 1.09 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,876 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 73.09 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x