Published : 11 May 2021 03:10 PM
Last Updated : 11 May 2021 03:10 PM

பிஹாரில் கங்கை நதியில் மிதந்து வந்த 71 சடலங்கள்: உ.பி.யில் கரோனாவால் உயிரிழந்தவர்களா?

பிரதிநிதித்துவப்படம்

பாட்னா

பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் பாயும் கங்கை நதியில் நேற்று 71 சடலங்கள் மிதந்து வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அந்த உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்களா என்பதைக் கண்டறிய 71 சடலங்களில் இருந்தும் மருத்துவ அதிகாரிகள் மாதிரிகளை எடுத்துக்கொண்ட பின்பே புதைக்கப்பட்டன. ஏறக்குறைய இரவு முழுவதும் உடல்களைப் புதைக்கும் பணி நடந்து இன்று காலைதான் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

பக்ஸர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார் சிங், 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) கூறுகையில், “இதுவரை 71 உடல்களைக் கங்கை நதியிலிருந்து மீட்டோம். சில உடல்களை நாங்கள் உரிய மரியாதையுடன் புதைத்துவிட்டோம். சில உடல்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் கங்கைக் கரையிலேயே புதைக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

கங்கை நதிக்கரையில் இறுதிச் சடங்கு செய்வோருக்கு மரக்கட்டைகள் விற்பனை செய்யும் ராம் ஆஷ்ரே யாதவ் கூறுகையில், “நதியில் மிதந்துவந்த பெரும்பாலான உடல்களை அதிகாரிகள் மண் அள்ளும் வாகனத்தின் மூலம், ஆழமான குழிகளைத் தோண்டிப் புதைத்தார்கள். இரவு முழுவதும் புதைக்கும் பணி நடந்தது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டது. எத்தனை உடல்களை அடக்கம் செய்தார்கள் எனக் கணக்கிடுவது எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால், இப்போது எந்த உடலும் நதியில் மிதக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

பக்ஸர் மாவட்ட உயர் அதிகாரி கே.கே.உபாத்யாயே கூறுகையில், “நதியில் மிதந்து வந்த பல உடல்கள் உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டன. பல உடல்கள் எரியூட்டப்பட்டன. உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களான வாரணாசி, அலகாபாத் நகரங்களில் இருந்து இந்த உடல்கள் நதியில் வந்திருக்கலாம்.

உடல்கள் அனைத்தும் தண்ணீரில் ஊறிவிட்டன. ஏறக்குறைய 5 முதல் 7 நாட்கள்வரை தண்ணீரில் கிடந்திருக்க வேண்டும். இந்த உடல்கள் எங்கிருந்து வந்தவை என விசாரணை நடத்தப்பட வேண்டும். எனக்குத் தெரிந்து வாரணாசி, அலகாபாத்திலிருந்து வந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x