கரோனா பாதிப்பு; 15 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள்: மாநிலங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

கரோனா பாதிப்பு; 15 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள்: மாநிலங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை
Updated on
1 min read

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டத்தின் கீழ் 15 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துச் சென்றுள்ளன.

உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் சுதான்சு பாண்டே, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம் மற்றும் ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த காலங்களைப் போல அதே முறையில் உணவு தானியங்கள் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும் என்றும் இதற்கான செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்கும்.

இதன்படி மே 10-ஆம் தேதி வரை 15.55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மே மாதத்தில் விநியோகிக்கப்பதற்கு இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளது. ஒரு லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை சுமார் 2 கோடி பயனாளிகளுக்கு 12 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வழங்கியுள்ளது.

கோதுமையின் கொள்முதலுக்காக விவசாயிகளின் நேரடி வங்கிக் கணக்கில் ரூ. 49,965 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 26.3 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 18.3 கோடி பரிவர்த்தனைகள் 2020 ஏப்ரல் முதல் 2021 ஏப்ரல் வரையில் கோவிட்-19 காலகட்டத்தில் பதிவாகி உள்ளது. புலம்பெயர் மக்கள் இதனால் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in