Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக் குழு பரிந்துரை

கரோனா சிகிச்சைக்கு தேவைப் படும் ஆக்சிஜன் நாடு முழுவதும் சீராக விநியோகிக்கப் படுவதை உறுதிசெய்ய 12 மருத்துவ நிபுணர்களைக் கொண்ட தேசிய பணிக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இதன் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும் அதை திறம்பட விநியோகிப்பதிலும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மேற்கொண்ட பணிகளை தேசிய பணிக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பாராட்டினர். ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் அதன் தேவையை நிர்வகிக்கவும் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் பணிக்குழு உறுப்பினர்கள், மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பவடோஷ் விஸ்வாஸ், டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் தேவேந்தர் சிங் ராணா, பெங்களூரு நாரயணா ஹெல்த்கேர் மருத்துவமனையின் தலைவர் தேவிபிரசாத் ஷெட்டி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ககன்தீப் காங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண், சாலை போக்கு வரத்து செயலாளர் கிரிதர் அரமனே ஆகியோரும் பங்கேற்றனர்.சிறப்பு அழைப்பாளர்களாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x