Published : 10 May 2021 04:33 AM
Last Updated : 10 May 2021 04:33 AM

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.8,923 கோடி நிதி: தமிழகத்துக்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவுகளுக்காக 25 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923 கோடி நிதி உதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில்தமிழகத்துக்கு ரூ.533 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் நிலைமை மோசமாகியுள்ளது. எனவே கிராமம், ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி ஆகிய மூன்று பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளிலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான செலவுகளுக்காக மத்திய அரசு ரூ.8,923 கோடி நிதி வழங்கியுள்ளது. 2021-22 நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் முதல் தொகுப்பாக இந்த தொகைவழங்கப்பட்டுள்ளது. இந்த நிதிஉதவி, கரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பரவலை கட்டுப்படுத்த 15-வது நிதிக் குழு பரிந்துரையின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் தொகுப்பு நிதி ஒதுக்கீடு ஜூன் மாதம் வழங்கப்படுவதாக இருந்தது. தற்போது கரோனா பரவல் சூழல் மிக மோசமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீட்டை ஒரு மாதம் முன்பாகவே வழங்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு வழங்குவதில் 15-வது நிதிக் குழு வகுத்திருந்த நிபந்தனைகளிலும் தளர்வுகளை கொண்டுவர நிதி அமைச்சகம் முன்வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு வழங்கியுள்ள நிதியில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.1,441.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.533.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, பிஹார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.6.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x