Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
கரோனா பரவலை தடுப்பதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, அங்கு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராய உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனிடையே, பிலாஸ்பூர் மாவட்டம் கொர்மி என்ற கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், மது கிடைக்காததால் அங்கிருந்த ஹோமியோபதி கடையில் விற்கப்படும் திரவ மருந்தினை கடந்த செவ்வாய்க்கிழமை வாங்கி உட்கொண்டுள்ளனர். அன்றைய தினம் இரவே அவர்களில் 4 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். கரோனா பாதிப்பால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதிய கிராம மக்கள், இறந்தவர்களின் சடலங்களை அவசர அவசரமாக எரியூட்டி விட்டனர். தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ஹோமியோபதி மருந்தை உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அவர்களுடன் சேர்ந்து அந்த மருந்தை குடித்த 16-க்கும் மேற்பட்டோரை மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்த தினங்களில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT