Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM
டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்தனர். இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாகுறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தலைநகர் டெல்லிக்கு தினமும் 700 டன் ஆக்சிஜனை விநியோகிக்க வேண்டும் எனவும் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, டெல்லிக்கு இதுவரை 730 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆக்சிஜன்பற்றாக்குறையை போக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான திட்ட வரைவை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
டெல்லிக்கு 700 டன் ஆக்சிஜனை தினமும் விநியோகிப்பதை மத்திய அரசு கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், கன்டெய்னர் லாரிகள் டெல்லிக்குள் வருவது குறித்து மத்திய அரசு சந்தேகம் எழுப்புகிறது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க நாங்கள் கன்டெய்னர் டிரைவர்களும் கிடையாது. தினசரி விநியோகம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் கடுமையான வழிமுறைகளை கையாள்வதை அரசு தவிர்க்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT