Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM
உத்தர பிரதேச மாநிலத்தில் 11 எம்எல்ஏ.க்கள் கரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
இவர்கள் பாஜக மற்றும் சமாஜ் வாதி கட்சியை சேர்ந்தவர்கள். முதல் பரவலில் உ.பி. மாநில கேபினட் அமைச்சர்கள் 2 பேர் உள்ளிட்ட 7 எம்எல்ஏ.க்கள் இறந்தனர்.
இரண்டாவது பரவலில், கடந்த 15 நாட்களில் மட்டும் உ.பி.யில் ஆளும் பாஜகவின் 4 எம்எல்ஏ.க்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ராய் பரேலியின் பகதூர் கோரி நேற்று உயிரிழந்தார். ஏப்ரல் 23-ல் அவுரய்யாவின் ரமேஷ் சந்திரா திவாகர், லக்னோவின் மேற்கு தொகுதியில் சுரேஷ்குமார் ஸ்ரீவத்ஸவா ஆகிய இருவரும் ஒரே நாளில் இறந்துள்ளனர்.
இதையடுத்து, ஏப்ரல் 28-ல் நவாப்கன்சின் பாஜக எம்எல்ஏ.வான கேசர்சிங் கங்குவார் கரோனாவிற்கு உயிரிழந்தார். கடைசியாக இறந்த இந்த நால்வரும் பஞ்சாயத்து தேர்தலில் தீவிரமாக கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுடன் சேர்த்து கரோனாவினால் இதுவரை 11 எம்எல்ஏ.க்கள் இறந்துள்ளனர். மேலும், பாஜக.வை சேர்ந்த வீரேந்திரா சிங், லோகேந்திரா சிங் ஆகியோர் விபத்து மற்றும் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர்.
உ.பி.யில் இறந்த இந்த 13 எம்எல்ஏ.க்களின் இடங்கள் காலியாகவே உள்ளன. இந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் 3 மாதங்களில் நடத்தப்பட வேண்டும். ஆனால், கரோனா பரவலால் தேர்தல் நடத்துவது ஆபத்தானது. மேலும், உ.பி.யின் 18-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 2022-ல் நடைபெற உள்ளது. எனவே, 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படுவது சந்தேகமே எனக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT