Published : 07 May 2021 04:55 PM
Last Updated : 07 May 2021 04:55 PM

மாநில ஆக்சிஜன் தேவையை ஒட்டியே உயர் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கின்றன: உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி

மாநில உயர் நீதிமன்றங்கள் ஆக்சிஜன் தேவை குறித்துப் பிறப்பிக்கும் உத்தரவால் எங்கள் வேலை கெடும். ஆகவே, உத்தரவுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தேவைக்காக மட்டுமே உயர் நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. அதில் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கரோனா சிகிச்சைக்கான மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 1,160 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது.

ஆனால், அம்மாநிலத்துக்கு 965 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மருத்துவப் பயன்பாடு ஆக்சிஜன் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அம்மாநிலத்திற்கு தினசரி வழங்கக்கூடிய ஆக்சிஜனின் அளவை நாளொன்றுக்கு 1200 மெட்ரிக்-டன்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கர்நாடக மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 965 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. அவர்களின் தேவைக்கு ஏற்ப நாங்களே வழங்குவோம். தற்போது ஆக்சிஜன் அளவை உயர்த்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்.

ஏற்கெனவே சென்னை தெலங்கானா உயர் நீதிமன்றங்கள் இவ்வாறு ஆக்சிஜன் அளவை உயர்த்தி வழங்குமாறு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி சரி செய்து கொள்கிறோம். இதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை. ஒவ்வொரு உயர் நீதிமன்றமும், ஒவ்வொரு விதமான உத்தரவைப் பிறப்பித்தால் வேலை செய்ய முடியாத சூழல் உருவாகும், ஆக்சிஜன் சப்ளையில் குழப்பம் ஏற்படும்” என வாதிட்டார்.

அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள், “ஒரு மாநில மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றம் சூழ்நிலைகளை ஆராய்ந்து உரிய உத்தரவைப் பிறப்பிக்கிறது. எனவே கர்நாடகா விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை,

இந்த உத்தரவைப் பொறுத்தவரை அங்குள்ள சூழலை ஆராய்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், அதிகார வரம்பை மீறும் பட்சத்தில் மட்டுமே உச்ச நீதிமன்றம் தலையிடும். எனவே இந்த விவகாரத்தில் தலையிட மாட்டோம்” எனத் தெரிவித்து, மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x