Published : 07 May 2021 03:39 PM
Last Updated : 07 May 2021 03:39 PM

டெல்லியை அச்சுறுத்தும் கரோனா: அமைச்சர்களுடன் முதல்வர் கேஜ்ரிவால் முக்கிய ஆலோசனை

தலைநகர் டெல்லியை கரோனா பரவல் தொடர்ந்து அச்சுறுத்திவரும் நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அமைச்சரவை சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் 4.14 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், 3,915 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் இதுவரை 2.1 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 2,34,083 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 36 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டெல்லி மிகமோசமான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. இதுவரை அங்கு 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் படுக்கை வசதியில்லாமல், படுக்கை வசதி கிடைத்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் அங்கு மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மாலை 4.30 மணியளவில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். டெல்லியில் வரும் 15ம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இன்றைய கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவுகள் எட்டப்படும் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. குறிப்பாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டி கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில் அது தொடர்பான அறிவிப்புகள் ஏதும் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x