Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அமைச்சர் முரளீதரன் கார் மீது திடீர் தாக்குதல்

கொல்கத்தா

மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இங்கு கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நேற்று பயணம் மேற்கொண்ட, வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பான வீடியோவை அமைச்சர் முரளீதரன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் உருட்டுக் கட்டைகள் மற்றும் கற்களுடன் ஒரு கும்பல் காரை வழிமறிப்பதையும் பிறகு தாக்குதல் நடத்துவதையும் பார்க்க முடிகிறது.

இது தொடர்பாக முரளீதரன், “மேற்கு மிட்னாபூரில் எனது கார் மீது திரிணமூல் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. எனது தனிப்பட்ட உதவியாளர் தாக்கப்பட்டார். இதனால் எனது பயணத்தை பாதியில் முடித்துக் கொள்ள நேரிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க வன்முறைகள் தொடர்பாக, 4 உறுப்பினர்களை கொண்ட உண்மை கண்டறியும் குழுவை மத்திய அரசு அனுப்பிய நாளில் இச்சம்பவம் நடந்துள்ளது.

வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களை சந்திக்க பாஜக தலைவர் நட்டாவும் மேற்கு வங்கம் வந்துள்ளார். அவர் கூறும்போது, “பாஜக தொண்டர்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வன்முறை யால் பாதிக்கப்பட்டவர்களை ரத்தம் தோய்ந்த கரங்களுடன் சென்று முதல்வர் மம்தா பார்க்கிறார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,அனைத்து கட்சியினரும் அமைதி காக்க முதல்வர் மம்தா நேற்று முன்தினம் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு, வேண்டுகோள் விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x