Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

ஊரும் உறவும் ஒதுக்கி வைத்ததால் குடிசையில் தனியாக தவித்த பரிதாபம்; தாய் தடுத்தும் தண்ணீர் கொடுத்தார் மகள்.. கண்கள் குளமாகி அடங்கியது தந்தையின் மூச்சு: கரோனாவின் கோர தாண்டவத்தில் புதையும் ‘மனிதம்’

கரோன தொற்றையும் பொருட்படுத்தாமல், மரணத்தின் பிடியில் உள்ள தனது தந்தைக்கு தண்ணீர் கொடுக்கும் மகளை, பிடித்து இழுக்கும் தாய்.

ஸ்ரீகாகுளம்

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தஒருவர், விஜயவாடாவில் பணியாற்றினார். சில நாட்களுக்கு முன் அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் தனதுசொந்த கிராமத்துக்கு சென்றார். ஆனால், ஊராரும் உறவினர்களும் அவரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் ஊருக்கு வெளியே உள்ளஒரு குடிசையில் அவர் தங்க வைக்கப்பட்டார். இவரது மனைவி, மகள் மற்றும் மகனும் அங்கேயே தனியாக ஒருகுடிசை அமைத்து தங்கி அவரை பார்த்துக் கொண்டனர். ஆனால், நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமானது. மூச்சு விட சிரமப்பட்டார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவரின் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. என்ன செய்வது என தெரியாமல் மனைவி, மகள், மகன் ஆகியோர் கதறி அழுதனர்.

இந்த சமயத்தில் குடிக்க தண்ணீர் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டே குடிசையில் இருந்து வெளியே வந்து கீழே விழுந்துவிட்டார். இதையடுத்து, தந்தைக்கு தண்ணீர் கொடுக்க முயன்றார்அவரது மகள். ஆனால், மகளுக்கு கரோனா தொற்று வந்துவிடுமோ எனும் அச்சத்தால், மகளை தடுத்தார் தாய். ஆயினும், தந்தை மீது இருந்த பாசத்தால், தாயின் பேச்சை கேளாமல் தனது தந்தைக்கு தண்ணீர் கொண்டுபோய் கொடுத்தார். அதை வாங்கிகுடித்தார் தந்தை. அந்தக் கணமே அவரது கண்கள் குளமாகி மூச்சு நின்று போனது. தந்தையின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் அந்த மகளும், மகனும் கதறி அழுதனர்.

பின்னர் ஊருக்கு வெளியே அவரது சடலம் தகனம் செய்யப்பட்டது. அதன் பின்னர இவர்கள் மூவருக்கும் கரோனா தொற்று பரவியது தெரியவந்தது.

தந்தைக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லும்போது, மகளை தாய் தடுத்ததை அந்த கிராமத்தை சேர்ந்தஒருவர் தனது செல்போனில் வீடியோபதிவு செய்துள்ளார். இது தற்போது வைரைல் ஆகி வருகிறது.

தாகத்தில் தவித்த தந்தைக்கு ஓடிச் சென்று தண்ணீர் கொடுத்த மகளின் கண்முன்னே, கண்களில் நீர் வழிய தந்தையின் உயிர் பிரிந்த சம்பவம் மனதை உலுக்கி விட்டது.

சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிக்காத அரசில் தொடங்கி, சாமானியன் வரை ஆட்கொண்டு மனிதத்தை புதைத்துவிட்டது கரோனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x