Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM
நாட்டில் கரோனா வைரஸ் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. எனவே, அதை எதிர்க்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கடந்த நவம்பரில் கரோனா தொற்று பரவுவதுகுறைந்த நிலையில் இந்த ஆண்டுபிப்ரவரியில் தொற்று பரவுவது அதிகமானது. தற்போது கரோனாவைரஸ் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடும் உள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் 3-வது அலைக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் 2-வது அலையைஎதிர்த்து நாம் போராடி வருகிறோம். ஆனால், மூன்றாவது கரோனா அலை வருவதை நாம் தவிர்க்க முடியாது. அதிகமான அளவில் வைரஸ் பரவல் இருப்பதால், எப்போது 3-வது அலை வரும் என்பதை நாம் தெளிவாகக் கூற இயலாது. இருப்பினும் நாம் புதிய 3-வது அலைக்குத் தயாராக இருக்க வேண்டும். கரோனா வைரஸின் மூல வைரஸ் எவ்வாறுபரவியதோ அதே அடிப்படையில்தான் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸும் பரவுகிறது.
ஒரு மனிதரை பாதித்து அதன் மூலம் தன்னைப் பெருக்கிக் கொண்டு அடுத்தடுத்து அவை பரவி வருகின்றன. முதலில் உருவான கரோனா வைரஸைவிட, உருமாற்றம் அடைந்த வைரஸ்கள், மக்களுக்கு அதிகமான அளவில் பரவக்கூடியதாக இருக்கிறது.
தற்போதுள்ள உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராகதடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் உலகம் முழுவதும் உருவாகலாம். இந்தியாவிலும் உருவாகலாம். உருமாற்றம் அடைந்த வைரஸ்களால் பரவலும் அதிகரிக்கும். எனவே அவற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு விஜய் ராகவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT