Last Updated : 05 May, 2021 03:20 PM

 

Published : 05 May 2021 03:20 PM
Last Updated : 05 May 2021 03:20 PM

ஐபிஎல் டி20 தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிசிசிஐ தகவல்

14-வது ஐபிஎல் டி20 சீசன், கரோனா வைரஸ் பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடரை ரத்து செய்ய வேண்டும் என்றும், மக்களின் சுகாதாரத்தைவிட ஐபிஎல் தொடருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் டெல்லி உயர் நீதின்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர் கரன்சிஹ் துக்ரால், சமூக ஆர்வலர் இந்தர் மோகன் சிங் ஆகியோர் சார்பில் இந்தப் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜஸ்மித் சிங் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் இருவருக்கும் கரோனா தொற்று என்பதால் அவர்கள் ஆஜராகவில்லை. டெல்லி அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில், “டெல்லியில் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். ஆனால், பொது சுகாதாரத்தைவிட ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உடனடியாகப் போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

பொது சுகாதாரத்தைவிட ஏன் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த மாதம் 19ஆம் தேதி டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பில், லாக்டவுனில், சர்வதேசப் போட்டிகள், சர்வதேச வீரர்கள் விளையாடும் போட்டிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உடல்நலத்தைவிட, ஐபிஎல் போட்டிகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?

டெல்லி மக்கள் கரோனாவில் நாள்தோறும் உயிரிழந்து வரும்போது, பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் இந்தப் போட்டிகள் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. டெல்லி அரசின் கவனக்குறைவான செயல்கள், மக்களைப் பற்றிய உணர்வற்ற நிலையால், மக்களின் நம்பிக்கையை இழந்துவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது

இந்த மனுவுக்கு பிசிசிஐ சார்பில் இன்று பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸ் சூழலைக் கருதி ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீரர்கள், அணியின் பிற ஊழியர்கள், பிற பங்கேற்பாளர்கள் ஆகியோரின் உடல்நிலையில் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இல்லை. அனைவரின் உடல்நலன், ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x