பிற மாநிலங்களுக்குச் சென்று வரும் அகமதாபாத் மக்களுக்கும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: நகர நிர்வாகம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த மக்கள் வேலை காரணமாக வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்தாலும், நகருக்குள் நுழையும்போது கண்டிப்பாக கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் என நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் பரவும் கரோனா வைரஸ் சூழல் குறித்து மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இதில் கடந்த மாதம் 5ஆம் தேதி அகமதாபாத் மாநகராட்சி பிறப்பித்த உத்தரவில், பிற மாநிலங்களுக்குப் பணி காரணமாகச் சென்ற அகமதாபாத் மக்கள் திரும்பிவரும்போது, ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யத் தேவையில்லை எனத் தெரிவித்தது.

அகமதாபாத் மாநகராட்சியின் இந்த உத்தரவைக் கடந்த மாதம் 29ஆம் தேதி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அகமதாபாத்தைச் சேர்ந்த மக்கள் பணி காரணமாக வெளிமாநிலத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் நகருக்குள் வரும்போது கண்டிப்பாக கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவி்ட்டது

இதையடுத்து, அகமதாபாத் மாநகராட்சி, ஏப்ரல் 5ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, புதிய உத்தரவை இன்று பிறப்பித்தது. அதில், “அகமதாபாத் நகரைச் சேர்ந்த மக்கள் வெளிமாநிலத்துக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டு மீண்டும் நகருக்குள் திரும்பி வரும்போது, 72 மணி நேரத்துக்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கரோனா நெகட்டிவ் என வழங்கப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.

இதனால் அகமதாபாத் நகர மக்கள் வெளிமாநிலத்தில் இருந்து மீண்டும் திரும்பிச் செல்லும்போது, கரோனா பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in