Last Updated : 04 May, 2021 08:02 PM

 

Published : 04 May 2021 08:02 PM
Last Updated : 04 May 2021 08:02 PM

பிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில் 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம்: ராகுல் காந்தி விமர்சனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி

மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடிக்கு ரூ.13,450 கோடியில் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கான செலவை வைத்து, 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கட்டும் மத்திய விஸ்டா திட்டத்தைக் கண்காணிக்கும் குழுவிடம் மத்திய பொதுப்பணித்துறை அளித்த அறிக்கையில், “2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் பிரதமர் இல்லம் கட்டி முடிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தை கரோனா காலத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பிரதமர் மோடியின் “ஈகோ”தான் மக்களின் வாழ்வாதாரத்தைவிடப் பெரியது. ரூ.13,450 கோடியை மக்களின் தடுப்பூசித் திட்டத்துக்குச் செலவிடாமல், கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்க செலவிடாமல், பெருந்தொற்றுக் காலத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு நிதியுதவி வழங்கச் செலவிடாமல், எதற்காக மத்திய விஸ்டா திட்டத்துக்குச் செலவிடுகிறார்கள்.

மத்திய விஸ்டா திட்டத்துக்காகச் செலவிடும் ரூ.13,450 கோடியின் மூலம் 45 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும். ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கலாம், 2 கோடி குடும்பங்களுக்கு நியாய் திட்டத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கலாம். ஆனால் மக்களின் உயிரைவிடப் பிரதமரின் ஈகோதான் பெரியது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், தடுப்பூசி, மருத்துவமனையில் படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையாலும் தடுமாறுகிறார்கள்.

நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி இப்போது மக்களைக் காப்பதுதான் சிறந்ததாக இருக்கும். ஆனால், அதை விடுத்து, பிரதமர் மோடிக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய வீடு கட்டுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது.

மத்திய அரசு எதற்கு முன்னுரிமை கொடுத்துச் செலவிடுகிறது, எங்கு நிதியைத் திருப்புகிறது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்திசின் கோகில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் உயிர் வாழ மூச்சுத் திணறுகிறார்கள். ஆனால், சுல்தான் தனது மாளிகையைக் கட்டுவதில் பிஸியாக இருக்கிறார்.

மத்திய அரசு தனது மத்திய விஸ்டா திட்டத்துக்கான செலவை மறுபரிசீலனை செய்து, அந்தத் தொகையை, மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தப் பயன்படுத்தி, உயிரைக் காக்க வேண்டும். மக்களின் உயிரைக் காப்பதுதான் இன்று முன்னுரிமை அளிக்க வேண்டும். தடுப்பூசி, ஆக்சிஜன், மருந்துகள், படுக்கைகள் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x