Last Updated : 04 May, 2021 04:25 PM

 

Published : 04 May 2021 04:25 PM
Last Updated : 04 May 2021 04:25 PM

கரோனாவில் மக்களின் உயிரைக் காப்பதை விடுத்து பிரதமருக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய வீடு: பிரியங்கா காந்தி சாடல்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப் படம்.

புதுடெல்லி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறையால் சிரமப்பட்டு வரும்போது அவர்களின் உயிரைக் காக்காமல், பிரதமருக்குப் புதிய வீடு கட்டுவதில் மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கட்டும் மத்திய விஸ்டா திட்டத்தைக் கண்காணிக்கும் குழுவிடம் மத்திய பொதுப்பணித்துறை அளித்த அறிக்கையில், “2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் பிரதமர் இல்லம் கட்டி முடிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, விஸ்டா திட்டத்தை விரைவுபடுத்தும் மத்திய அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், தடுப்பூசி, மருத்துவமனையில் படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையாலும் தடுமாறுகிறார்கள்.

இந்த நேரத்தில் மத்திய அரசு செய்யவேண்டிய சிறந்த பணி என்னவென்றால், நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி மக்களைக் காப்பதுதான். ஆனால், அதை விடுத்து, பிரதமர் மோடிக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய வீடு கட்டுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது.

மத்திய அரசு எதற்கு முன்னுரிமை கொடுத்துச் செலவிடுகிறது, எங்கு நிதியைத் திருப்புகிறது என்பது மக்களுக்குத் தெரியவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய விஸ்டா திட்டத்தை கரோனா காலத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x