Published : 02 May 2021 09:27 PM
Last Updated : 02 May 2021 09:27 PM

நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை: தேர்தல் அதிகாரியிடம் திரிணமூல் காங்கிரஸ் மனு

கொல்கத்தா

நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் திரிணமூல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.

மேற்குவங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ், பாஜகவை விடவும் இரண்டு மடங்கு கூடுதல் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது . நந்திகிராமில் கடந்த 2007ல் ரசாயன ஆலைக்கு எதிரான நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்தவர் சுவேந்து அதிகாரி. இதனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி கடும் சவாலாக இருந்தார்.

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கத்தில் பின்தங்கினார். எனினும் தற்போது நிலைமை மாறியது. முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை 1,200வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக கூறப்பட்டது. ஏஎன்ஐ உட்பட பல செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டன. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் சற்று நேரத்தில் பாஜக மூத்த தலைவரும் செய்தித்தொடர்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது:

‘‘நந்திகிராம் தொகுதியில் அறிவிக்கப்பட்ட முடிவுகளில் நியாயமில்லை. நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. விரைவில் இதனை வெளியிடுவேன். நீதிமன்றத்தில் முறையிடுவேன்’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என தலைமை மேற்குவங்க மாநில தேர்தல் அதிகாரியிடம் திரிணமூல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. கொல்கத்தாவில் அவரது அலுவலகத்திற்கு சென்று இந்த புகார் மனுவை அளித்தனர். அதில் வாக்கு எண்ணிக்கையில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதால் உடனடியாக மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x