Published : 02 May 2021 07:00 PM
Last Updated : 02 May 2021 07:00 PM

நந்திகிராமில்  வெற்றி பெற்றது யார்? - திடீர் குழப்பம்

மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றிபெற்றதாக தகவல் வெளியான நிலையில் அங்கு பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மால்வியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது . நந்திகிராமில் கடந்த 2007ல் ரசாயன ஆலைக்கு எதிரான நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்தவர் சுவேந்து அதிகாரி. இதனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி கடும் சவாலாக இருந்தார்.

மேற்குவங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ், பாஜகவை விடவும் இரண்டு மடங்கு கூடுதல் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கத்தில் பின்தங்கினார். எனினும் தற்போது நிலைமை மாறியது. முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக கூறப்பட்டது. ஏஎன்ஐ உட்பட பல செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டன.

இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிர்மலா சீதாராமன் பதவிட்டு நீக்கிய ட்விட்டர் பதிவு

ஆனால் சற்று நேரத்தில் பாஜக மூத்த தலைவரும் செய்தித்தொடர்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக கூறியுள்ளார்.

— Amit Malviya (@amitmalviya) May 2, 2021

அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘மிகப்பெரிய வெற்றி

முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார். சுவேந்து அதிகாரி 1622 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார். தோல்வியடைந்த பிறகும் முதல்வர் பதவியில் அவர் தொடரலாமா? அவரது தோல்வியே திரிணமூல் காங்கிரஸ் தோல்வி உறுதியாகி விட்டது’’ எனக் கூறியுள்ளார்.

சுவேந்து அதிகாரி முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் அமைச்சராக இருந்தவர். பின்னர் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x