Published : 02 May 2021 08:19 AM
Last Updated : 02 May 2021 08:19 AM

கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: வரலாறு படைப்பாரா பினராயி விஜயன்? 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பாரா

கேரளாவில் 2-வது முறையாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்கவைத்து வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த 1980-ம் ஆண்டுகளில் இருந்தே கேரளாவில் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இருமுறை ஆட்சியில் அமர்ந்தது இல்லை. ஆனால், இந்த முறை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியை முதல்முறையாகத் தக்கவைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் கூறுகின்றன.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் 957 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் பினராயி விஜயன், அவரின் அமைச்சரவை சகாக்கள் 11 பேர், காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா, மெட்ரோமேன் ஸ்ரீதரன், முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் உள்ளிட்டபலர் களத்தில் உள்ளனர்.

இந்த முறை வலுவான கூட்டணியை அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தேர்தலில் களமிறங்கியுள்ளது. இந்தக் கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 75 இடங்களில் போட்டியிடுகிறது,இந்தியக் கம்யூனிஸ்ட் 23 இடங்கள், கேரள காங்கிரஸ் மாணி 12, மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 3 இடங்கள், லோக் தந்தி்ரிக் ஜனதா தளம்3 இடங்கள், இந்திய தேசிய லீக் 3 இடங்கள், காங்கிரஸ் மதச்சார்பற்றது ஒரு இடம்,தேசிய மதச்சார்பற்ற மாநாட்டுக்கட்சி ஒரு இடம், கேரள காங்கிரஸ்(பி) ஒரு இடம், ஜனாதிபதிய கேரள காங்கிரஸ் ஒரு இடம், சுயேட்சைகள் 13 பேர் மார்க்சிஸ்ட் ஆதரவுடன் களமிறங்கியுள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில், காங்கிரஸ் கட்சி 93 இடங்களில் போட்டியிடுகிறது. ஐயுஎம்எல்25 இடங்கள், கேரள காங்கிரஸ் 10 இடங்கள், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 5, புரட்சிகர மரர்க்சிஸ்ட் கட்சி ஒரு இடம், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு ஒரு இடம், கேரள காங்கிரஸ்(ஜேக்கப்) ஒரு இடம், காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சைகள் 4 பேர் போட்டியிடுகின்றனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 115 இடங்கள், பாரத் தர்ம ஜன சேனா 21 இடங்கள், அதிமுக ஒரு இடம், பாஜக ஆதரவுடன் சுயேட்சைகள் 3 பேர் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் பலவும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சியை தக்கவைக்கும் எனத் தெரிவித்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையை இழக்கவில்லை. பாஜகவும் கடந்த 2016ம் ஆண்டில் ஒரு இடத்தில் வென்றது இந்த முறை கூடுதல் இடங்களைப் பெறுவோம் என நம்புகிறது.

இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் 15 சுற்றுகள் எண்ணப்படுகின்றன, முதல்கட்ட நிலவரம் காலை 10 மணிக்குத் தெரியவரும். மாலை 4 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் முடிவு தெரியவரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி மீனா தெரிவித்துள்ளார்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதிவரை 7.56 லட்சம் தபால் வாக்குகள் வந்துள்ளன. இதன் முன்னணி நிலவரம் காலை 8.30 மணிக்குத் தெரியவரும்.

24 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்தியப்படையினர் உள்பட 30,281 போலீஸார் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் மொத்தம் 2.74 லட்சம் வாக்காளர்களில் 2.03 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x