Last Updated : 01 May, 2021 09:34 PM

 

Published : 01 May 2021 09:34 PM
Last Updated : 01 May 2021 09:34 PM

உ.பி. கவுதம்புத்நகரில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 189 காவலர்களுக்கு கரோனா

உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம்புத் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 189 போலீஸாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அம்மாநிலத்தின் மற்ற மாவட்டங்களை விட அதிகம் எனக் கருதப்படுகிறது.

இதற்கு உ.பி.யின் கவுதம்புத்நகர் மாவட்டத்தில் உள்ள ஐடி நகரமாக நொய்டா ஒரு முக்கியக் காரணம்.

இங்கு பெரும் பணக்காரர்களும், கூலித் தொழிலாளிகளும் அதிகம் வாழ்கின்றனர். தலைநகரான டெல்லிக்கு அருகில் அமைந்த இந்நகரில் கிரிமினல் குற்றங்களும் அதிகம்.

இதன் காரணமாக இங்கு பணியாற்றும் போலீஸாரின் பணிச்சுமை அதிகம். இவர்கள் வழக்கமான சட்டம் -ஒழுங்கு மற்றும் கிரிமினல் குற்றங்கள் மீதான நடவடிக்கைகளை விடக் கரோனா பாதுகாப்பு பணி அதிகம் உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக இங்குள்ள மருத்துவமனைகள் முதல் மயானங்கள் வரை உ.பி. போலீஸாருக்கு பாதுகாப்புப் பணி அதிகரித்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்களிலும் பாதுகாப்பிற்காக போலீஸார் நிற்க வேண்டி உள்ளது.

இதன் காரணமாக, கவுதம்புத்நகர் மாவட்டத்தின் 189 போலீஸாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியாற்றும் இரண்டு தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நொய்டாவின் துணை ஆணையரான சு.ராஜேஷ் ஐபிஎஸ் மற்றும் கூடுதல் உதவி ஆணையரான ஜி.இளமாறன் ஐபிஎஸ் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழர்களான இந்த அதிகாரிகளில் ராஜேஷ் கோவில்பட்டியையும், இளமாறன் மன்னார்குடியையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் உயர் அதிகாரிகளாக இருப்பினும், கரோனா பணிக்காக களத்தில் இருந்து கண்காணிப்பு பணி செய்ய வேண்டி உள்ளது. இருவரும் தற்போது பாதுகாப்பு காரணமாகத் தம் குடும்பத்தாரைப் பிரிந்து வீட்டிலிருந்து வெளியேறி ஓட்டல் அறைகளில் தனியாகத் தங்கி உள்ளனர்.

உ.பி.யின் தலைநகரான லக்னோவிற்கு அடுத்தபடியாக சுமார் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் நொய்டாவில் பணியாற்றுகின்றனர். இவர்களில் மற்றொரு துணை ஆணையரான அங்கிதா சர்மா ஐபிஎஸ் என்பவருக்குத் தொற்று ஏற்பட்டு தற்போது குணமாகி உள்ளார்.

கரோனாவின் இரண்டாவது பரவலில் அதிகம் பாதித்த நகரங்களில் ஒன்றாக உ.பி. இடம் பெற்றுள்ளது. இங்கு சிறிதும், பெரிதுமாகவும், பெருநிறுவனங்களை சேர்ந்ததுமான மருத்துவமனைகள் அதிகம் அமைந்துள்ளன.

இவற்றில், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் பஞ்சாப்பில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இவர்களில் சிகிச்சை பலனின்றி பலியான சிலருக்கு நொய்டாவின் போலீஸாரே இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டி இருந்தது.

தம் சொந்தங்கள் என்றாயினும் கரோனா தொற்றுக்கு அஞ்சி பலியானவர்களது உறவினர்களில் சிலர் கொள்ளி வைக்கவும் முன்வருவதில்லை. இதுபோன்ற சிலருக்கு போலீஸாரே இறுதிச் சடங்கை முடித்த வைத்த பரிதாப நிலையும் ஏற்றபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x