Published : 01 May 2021 07:29 PM
Last Updated : 01 May 2021 07:29 PM

மகாராஷ்டிராவில் கோவிட் இரண்டாவது அலையிலும் தொடரும் தமிழர்கள் அமைப்பின் நற்பணிகள்

மகாராஷ்டிராவில் தீவிரமாகி வரும் கரோனா இரண்டாவது அலைக்கு நடுவில், தமிழர்கள் ஆரம்பித்திருக்கும் அமைப்பான இலெமூரியா அறக்கட்டளை மும்பை மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலெமூரியா அறக்கட்டளை 2013ஆம் ஆண்டு முதல், தானே நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி வளர்ச்சி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்த பிரிவு மக்களுக்குத் தொண்டு செய்தல் எனப் பல தொண்டுகளை மேற்கொண்டு வரும் இந்த அமைப்பு, வெளிமாநிலங்களில் புலம் பெயர்ந்து தமிழ்ப் பணியாற்றி வரும் ஆர்வலர்களை ஊக்கப்படுத்திப் பாராட்டி விருதுகளும் வழங்கி வருகிறது.

மேலும் தமிழ் மாணவர்கள், தாய்மொழிக் கல்வி பெறும் மாணவர்களை ஊக்கமளித்து விருதுகள் அளிப்பது, தமிழின மொழி, பண்பாட்டுக் கூறுகளை இயல், இசை, நாடகம் வழியாக இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது என்று தீவிரமாக இயங்கி வருகிறது.

மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதி மக்களுக்கு இலெமூரியா அறக்கட்டளை தொடர்ந்து சேவை செய்து வருகிறது. கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தவுடன் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக மருத்துவப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு, இலெமூரியா அறக்கட்டளை கபசுரக் குடிநீர் வழங்கி, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவியுள்ளது.

கிட்டத்தட்ட 15 பகுதிகளில் இருக்கும் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த மருந்தை விநியோகித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 100 கிலோ மருந்துகளை ரூ.1.68 லட்சம் மதிப்பில் இலெமூரியா அறக்கட்டளை வாங்கியுள்ளது. உடன் பல தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உதவியுள்ளனர்.

கடந்த வருடம் ஊரடங்கு சமயத்தில் இலெமூரியா அறக்கட்டளை மகாராஷ்டிராவில் மேற்கொண்ட பணிகளைப் பாராட்டி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x