Published : 01 May 2021 07:19 PM
Last Updated : 01 May 2021 07:19 PM

டெல்லிக்கு ஒதுக்கிய 490 டன் ஆக்சிஜன்; எப்பாடுபட்டாவது இன்றே அளிக்க வேண்டும்; தவறினால் நீதிமன்ற அவமதிப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லி

டெல்லிக்கான 490 மெட்ரிக் டன் மருத்துவப் பயன்பாடு ஆக்சிஜனை ஒதுக்கியதாக மத்திய அரசு தெரிவித்து வருவது காகிதத்தில் மட்டுமே உள்ளது. எப்பாடுபட்டாவது ஆக்சிஜனை இன்றே அளிக்க வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பலர் உயிரிழந்ததையடுத்து, உரிய அளவு மருத்துவப் பயன்பாடு ஆக்சிஜனை வழங்க உத்தரவிடக் கோரி மருத்துவமனை நிர்வாகங்கள் தொடர்ந்த வழக்குகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இன்று நீதிபதிகள் விபின் சிங்கி, ரேகா பாலி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை, மத்திய அரசு ஒதுக்கியதாகக் கூறப்பட்ட ஆக்சிஜன் இதுவரை வழங்கப்படவில்லை என்று டெல்லி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று டெல்லி தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் இன்றும் 8 பேர் உயிரிழந்தது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக மத்திய அரசு, டெல்லி அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.

பின்னர் வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, “டெல்லிக்குத் தேவையான 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தொடர்ச்சியாகக் கூறி வந்தாலும், அவை ஒரு நாள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. ஒரு நாள் கூட டெல்லிக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆக்சிஜன் முழுமையாக வழங்கப்படவில்லை. மேலும் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆக்சிஜன் அளவு காகிதத்தில் மட்டுமே உள்ளது என்பது கவலையளிக்கிறது.

எனவே, டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட 490 மெட்ரிக் டன் மருத்துவப் பயன்பாடு ஆக்சிஜனை இன்று மாலைக்குள் எப்பாடுபட்டாவது மத்திய அரசு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும், கனரகத் தொழிற்சாலைகள் இல்லாத மாநிலம் டெல்லி என்பதால். ஆக்சிஜனை நிரப்பி வாகனம் மூலம் கொண்டு வரும் கிரையோஜெனிக் டேங்கர்கள் இங்கு இல்லை என்பதால், அந்த டேங்கர்களையும் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவைச் செயல்படுத்தவில்லை என்றால், உரிய அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியது வரும். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக 10 நாட்களுக்கு மேல் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் பட்டியலையும், சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கையையும் தாக்கல் செய்ய மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டனர்.

அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சர்மா, இந்த ஆக்சிஜன் வழங்குதல் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினார். குறைந்தது 30 நிமிடங்களாவது உரிய துறையிடம் விளக்கம் பெறுவதற்காக விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினார்..

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தற்போது இந்த விவகாரத்தில் தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. எனவே, எங்களது உத்தரவை அமல்படுத்த வேண்டும். சிகிச்சைக்கான ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிரிழக்கும்போது எங்களால் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

எனவே, மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டு கூறியதுபோல 490 மெட்ரிக் டன் மருத்துவப் பயன்பாடு ஆக்சிஜனை டெல்லிக்கு உடனடியாக வழங்கியே தீர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு மேல் வாதிட ஒன்றும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்து, இந்த வழக்கு மீதான விசாரணையை 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x