Last Updated : 01 May, 2021 05:26 PM

 

Published : 01 May 2021 05:26 PM
Last Updated : 01 May 2021 05:26 PM

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி, தோல்வியின் பொறுப்பு அமித் ஷாவை சேருமா?

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்நிலையில், பாஜகவின் வெற்றி, தோல்விக்கானப் பொறுப்பு அமித்ஷாவை சேருமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. இவற்றில் எப்போதும் இல்லாத வகையில் பாஜக அதிக தீவிரம் காட்டியிருந்தது.

அதுவும் குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸிடம் இருந்து, ஆட்சியைப் பறிக்கும் நிலையும் உருவாகி இருந்தது.

இந்த ஐந்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் சூறாவளிப் பிரச்சாரம் செய்திருந்தனர்.

மேலும் ஐந்து மாநிலங்களுக்கும் தனித்தனியாக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை அமர்த்தியிருந்தது. இவர்கள் மீது பாஜகவின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டாவை விட உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகமானக் கவனம் செலுத்தினார்.

இதனால், இந்தமுறை தேர்தலில் பாஜகவின் நடவடிக்கைகளின் கட்டுப்பாடுகள் அதன் தலைவர் நட்டாவைவிட அமித்ஷாவிடம் இருப்பது போன்ற சூழல் நிலவியது. பாஜகவின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நட்டாவை விட அமித்ஷா அதிகம் பேசி வந்தார்.

எனவே, இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு கிடைக்கும் முழு வெற்றிக்கான காரணகர்த்தாவாக அமித்ஷா கருதப்படுவார் எனத் தெரிகிறது. அதேசமயம், இவற்றில் தோல்வி ஏற்பட்டால் அதன் பொறுப்பை அமித்ஷா ஏற்பாரா? எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடன் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘அசாமை தக்கவைத்து மேற்கு வங்கத்தை பாஜக கைப்பற்றினால் அதன் முழுப்பலனும் அமித்ஷாவையே சேரும்.

இதில், தோல்வி ஏற்பட்டால் அதன் முழுப்பொறுப்பையும் கட்சி தலைவர் எனும் முறையில் நட்டாவே பொறுப்பேற்க வேண்டி இருக்கும். எனினும், மேற்கு வங்கத்தில் பாஜகவின் அடிமட்ட வளர்ச்சி முதல் அமித்ஷா கவனம் செலுத்தி வந்தார்.

இதனால் தான் அங்கு மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக 18 தொகுதிகள் கிடைத்தன. இருப்பினும் அவர் தன் முக்கியப் பொறுப்பான உள்துறையில் கவனம் செலுத்துவதை விட அதிகமாக இவ்வாறு கட்சி பணியில் இருப்பது பாஜகவிற்கு ஆரோகியமானதல்ல.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி 2019 இல் அவர் மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். அதன் பிறகு 2021 ஜனவரியில் அமித்ஷா தனது தலைவர் பதவியில் இருந்து இறங்கி இருந்தார்.

இருப்பினும், அவர் மத்திய அமைச்சரான பிறகும் கட்சி பணியிலும் அதிக கவனம் செலுத்துவதை நிறுத்தவில்லை. இதற்கு அவர் இந்த இரண்டு விஷயங்களிலும் சிறந்து விளங்க முயல்வதாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் அவருக்கு எதிர்காலத்தில் ஒரு முக்கிய நோக்கம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. அமித்ஷாவின் நடவடிக்கைகளால் அவர் கட்சியில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையை பெற்றுள்ளார்.

எனினும், கடந்த வருடம் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அமித்ஷா விலகி இருந்தார். அங்கு நடந்த தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

இதற்கு அங்கு பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதி அல்ல எனும் வகையில் அவருக்கு தவறாகக் கிடைத்த தகவல் காரணம் எனக் கருதப்பட்டது. ஆனால், பிஹாரில் கிடைத்த வெற்றிக்காக அனைவர் முன்னிலையிலும் பிரதமர் மோடி கட்சியின் தலைவர் நட்டாவை பாராட்டி இருந்தார்.

பிரதமரின் பாராட்டைப் பெறும் வாய்ப்பை இந்தமுறையும் இழக்க அமித்ஷா விரும்பவில்லை எனத் தெரிகிறது. ஏனெனில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவிற்கு கிடைக்கும் வெற்றியின் பலம் என்ன என்பதை அவர் அறிவார் எனக் கட்சி நிர்வாகிகள் சூசகமாகக் கூறுகின்றனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்பாக பாஜக கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியை இழந்தது. பிறகு அதே வருடத்தில் மகராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களிலும் ஆட்சியைத் தவற விட்டது.

ஹரியானாவில் தனது ஆட்சியை தக்கவைக்க பாஜக கடினமான சூழலை சந்திக்க நேர்ந்தது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x