

குஜராத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 12 கரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலையால் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
இதனையடுத்து அகமதாபாத் நகரில் சினிமா தியேட்டர், ஜிம், பூங்காக்கள், நீச்சல் குளம் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
பல நகரங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் இயக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைகள், சந்தைகள் போன்றவை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் குஜராத் மாநிலம் பாரூச் நகரில் படேல் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இந்த சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கி 12 கரோனா நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படைவீரர்கள் அங்கிருந்த மற்ற நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.