Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

கரோனா வைரஸ் 2-வது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு 40 நாடுகள் உதவிக்கரம்: ரஷ்யாவில் இருந்து 22 டன் மருந்துகள் வந்தன; ஆக்சிஜன் அனுப்புகிறது அமெரிக்கா

கரோனா வைரஸ் 2-வது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ 40-க்கும் மேற்பட்ட நாடுகள் முன்வந் துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து சுமார் 22 டன் எடை கொண்ட மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் 2 சரக்கு விமானங்கள் நேற்று டெல்லி வந்தடைந்தன. அமெரிக்காவில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், பரி சோதனை கருவிகள் அனுப்பப்பட உள்ளன.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா நேற்று கூறியதாவது:

இந்தியாவில் தீவிர கரோனா பரவல் காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க 40-க்கும் மேற்பட்ட நாடுகள் முன்வந்துள்ளன.

இதன்படி, 550 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், 4 ஆயிரம் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் மற்றும் 10 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் என எதிர்பார்க்கிறோம். ஏராளமான மருத்துவ உபகரணங்கள் அடங் கிய 2 சிறப்பு விமானங்கள் அமெரிக்காவில் இருந்து வெள்ளிக்கிழமை (இன்று) வரும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், எகிப்தில் இருந்து 4 லட்சம் ரெம் டெசிவிர் மருந்தை இறக்குமதி செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. இதே மருந்தை ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், உஸ்பெகிஸ் தான் ஆகிய நாடுகளில் இருந்தும் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஷ்ய விமானங்கள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று முன்தினம் தொலைபேசியில் ஆலோசனை நடத் தினர். அப்போது கரோனா சவாலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் உதவுவோம் என்று அதிபர் புதின் உறுதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து 2 சரக்கு விமானங்களில் அவசர கால மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் நேற்று டெல்லி வந்தடைந்தன. இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் திமித்ரி சோலோடோவ் கூறும்போது, ‘‘ரஷ்யாவில் இருந்து சுமார் 22 டன் மருந்து, மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. இவற்றில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 20 கலன்கள், 75 வென்டிலேட்டர்கள், 150 கண்காணிப்பு கருவிகள், கரோனா மருந்துகள் அடங்கிய 2 லட்சம் பெட்டிகள் உள்ளன’’ என்று தெரிவித்தார்.

ரஷ்ய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த புதன்கிழமை பிரதமர் மோடியும் அதிபர் புதினும் முக்கிய ஆலோசனை நடத் தினர். அப்போது ‘ஸ்புட்னிக் வி’ கரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறித்து இரு தலைவர்களும் ஆலோ சித்தனர். இந்தியாவில் 85 கோடி ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் உற்பத்தி தொடங்கும். அதற்கு முன்பாக மே 1-ம் தேதி ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக் வி’ கரோனா தடுப்பூசிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘பெவிபிர்ராவிர்’ மருந்து நல்ல பலன் அளிக்கிறது. இந்த மருந்துகளை இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளோம். அத்துடன் ரஷ்யாவில் தயாரிக் கப்பட்ட வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்களையும் அனுப்பியுள் ளோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உதவி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ம் தேதி தொலைபேசியில் ஆலோசனை நடத் தினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கை யில், ‘கரோனா வைரஸ் காலத்தில் அமெரிக் காவுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியது. இதற்கு பிரதிபலனாக அமெ ரிக்கா சார்பில் இந்தியாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். 1,100 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1,700 ஆக்சிஜன் கான்சன்ட் ரேட்டர்கள், கரோனா தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட் டவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகா ணம் சார்பில் 440 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 9.6 லட்சம் பரிசோதனை கருவிகள், ஒரு லட் சம் என் 95 முகக்கவசங்கள் உள்ளிட்டவை விமானம் மூலம் இந்தியாவுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவை தவிர அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள், அமைப்புகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பிலும் இந்தியாவுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x