Published : 29 Apr 2021 12:26 PM
Last Updated : 29 Apr 2021 12:26 PM

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இறுதி கட்டத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று 8-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்காக முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


மேற்குவங்கத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று இறுதிகட்ட தேர்தல் 35 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6.30 மணிவரை நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. நண்பகல் 11 மணியளவில் 37.80 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன.

35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள், இறுதிகட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி, தோல்வியை 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதிகளில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்படுகிறது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடுமையான கரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

மத்திய படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நடந்த தேர்தல்களில் சில இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டுபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x