புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அவசியமில்லை; தொலைநோக்குப் பார்வைதான அவசியம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் தற்போதுள்ள சூழலுக்கு மத்திய விஸ்டா திட்டம் (புதிய நாடாளுமன்றக் கட்டிடம்) அத்தியாவசியமில்லை. ஆனால், மத்திய அரசுக்கு தொலைநோக்குப் பார்வைதான் அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வரைஸ் பரவல் 2-வது அலையால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.60 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா உயிரிழப்பும் 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மத்திய அரசுக்கு மத்திய விஸ்டா திட்டம் (புதிய நாடாளுமன்றக் கட்டிடம்) இப்போதுள்ள சூழலில் அத்தியாவசியமில்லை. மத்திய அரசுக்கு தொலைநோக்குப் பார்வைதான் அத்தியாவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய விஸ்டா திட்டத்தின் மூலம் மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தை ரூ.800 கோடிக்கும் அதிகமாகச் செலவு செய்து கட்டுகிறது. 75-வது சுதந்திர தினத்துக்கு முன்பாக இந்தப் புதிய நாடாளுமன்றத்தைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏறக்குறைய 900 முதல் 1200 எம்.பி.க்கள் அமரும் வரை பிரம்மாண்டமாக நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. ஆனால், நாடு தற்போது கரோனா பிரச்சினைகளைச் சந்தித்துவரும் நிலையில் விஸ்டா திட்டத்துக்கு அரசு செலவிடும் தொகையை கரோனா பிரச்சினைகளைச் சமாளிக்கப் பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட மற்றொரு கருத்தில், “சாமானிய மக்கள் ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். உதவி மூலம் ஒருவரின் மனதைத் தொட்டால் போதும். கைகளைப் பிடிக்கத் தேவையில்லை என்பதை மக்கள் காண்பிக்கிறார்கள். தொடர்ந்து உதவுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in