கரோனாவில் உயிரிழந்த 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் திணித்துச் சென்ற அவலம்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
2 min read

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 22 பேரின் உடல்களை ஏதோ துணி மூட்டையை ஏற்றித் திணிப்பதுபோல், ஒரே ஆம்புலன்ஸில் கொண்டுசென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் மாவட்டம் பீட் நகரில் உள்ள மருத்துவமனையில்தான் இந்த மனிதநேயமற்ற சம்பவம் நடந்துள்ளது.

கரோனாவில் உயிரிழந்தவர்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும், அவர்களுக்குரிய இறுதி மரியாதையிலிருந்து நழுவக்கூடாது என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுபோன்று மனித நேயமற்று, ஏதோ சாக்கு மூட்டைகளையும், துணி மூட்டைகளையும் ஏற்றுவதுபோல் ஏற்றி, எரியூட்டும் இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பீட் நகரில் உள்ள அம்பாஜோகோய் எனும் இடத்தில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. நாளுக்கு நாள் உடல்கள் சேர்ந்தவுடன் பிணவறையில் இருந்த உடல்களை எரியூட்ட உடல்களைக் கொண்டு சென்றனர்.

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்

மருத்துவக் கல்லூரிக்குப் போதுமான ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை என்பதால், ஒரே நேரத்தில் 22 உடல்களையும் அடுக்கிவைத்து மருத்துவமனை ஊழியர்கள் தகணம் செய்யும் இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் சிவாஜி சுக்ரே நிருபர்களிடம் கூறுகையில், “எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. கரோனா முதல் அலையின் போது 5 ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவை திரும்பப் பெறப்பட்டு 2-வது அலையில் 2 ஆம்புலன்ஸ்களை மட்டுமே அரசு வழங்கியுள்ளது.

ஒரு ஆம்புலன்ஸில் இறந்தவர்களின் உடல்களையும், மற்றொரு ஆம்புலன்ஸில் நோயாளிகளையும் அழைத்துவருகிறோம். இங்கிருந்து உடல்களை அருகே இருக்கும் லோகந்தி ஸ்வர்கான் எனும் கிராமத்தில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எரியூட்டும் மையத்துக்குக் கொண்டு சென்றோம். உடல்களைப் பாதுகாக்கும் வசதியும் இல்லை. கூடுதலாக 3 ஆம்புலன்ஸ்களை வழங்கக் கோரி கடந்த 17-ம் தேதி மாவட்ட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினேன். இதுவரை பதில் இல்லை” எனத் தெரிவித்தார்.

பாஜக எம்எல்சி சுரேஷ் தாஸ் கூறுகையில், “ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்களைக் கொண்டுசென்றது குறித்துக் கேள்வி கேட்டால், மருத்துவமனை நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் மாறி மாறித் தங்களுக்குள் குற்றம் சாட்டுகின்றன” எனத் தெரிவித்தார்.

பீட் நகராட்சித் தலைவர் ராஜ்கிஷோர் கூறுகையில், “இந்தச் சம்பவத்தைக் கேட்டு வேதனைப்படுகிறேன். அன்றைய தினம் மற்றொரு ஆம்புலன்ஸில் 8 உடல்கள் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிக்குக் கூடுதலாக ஆம்புலன்ஸ் வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவோம்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in