Published : 26 Apr 2021 10:31 AM
Last Updated : 26 Apr 2021 10:31 AM

நாடுமுழுவதும் கரோனா தற்காலிக மருத்துவமனைகள்: ராணுவ தளவாட நிறுவனங்கள் நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ராணுவ தளவாட நிறுவனங்கள் கோவிட் மருத்துவமனைகளை நிறுவி வருகின்றன.

கர்நாடகாவின் பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் அவசர சிகிச்சைப் பிரிவு, பிராணவாயு மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையம், 180 படுக்கைகளுடன் இயங்குகிறது. இந்த ராணுவ பொதுத்துறை நிறுவனமானது, 250 படுக்கை வசதிகளுடன் கூடிய மையத்தை பெங்களூரு நகராட்சி அதிகாரிகளிடம் வழங்கியுள்ளது.

ஒடிசாவின் கோராபுட்டில் 70 படுக்கைகள் கொண்ட மையமும், மகாராஷ்டிராவின் நாசிக்கில் 40 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் இயங்கி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் 250 படுக்கைகள் கொண்ட கொவிட் சிகிச்சை மையத்தை அமைக்கும் பணியையும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த மையம் மே மாதம் முதல் வாரத்தில் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு மற்றும் லக்னோவில் கூடுதலாக செயற்கை சுவாச கருவிகளையும், பிராணவாயு வசதிகளையும் ஏற்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் உத்தரகாண்டில் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்திற்கு சொந்தமான 25 இடங்களில் பிராணவாயு, படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையங்களை அந்த நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.

மொத்தமுள்ள 1,405 படுக்கைகளில் 813 படுக்கைகள் கோவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆவடி, அரவங்காடு, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தின் இடங்கள் கோவிவிட் சிகிச்சை மையங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளன.

பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், பிஇஎம்எல் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு ராணுவ பொதுத்துறை நிறுவனங்கள், பிராணவாயுவை, ஆலைகளில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x